சித்தாந்த செல்வர், அருநூற்புலமை ஆன்றோர் பேராசிரியர் டாக்டர் ப. இராமன், அவர்களின் வழிக்காட்டுதல் பெயரில் இப் பாடல் என்னைப் போல் எளியவர் படிப்பதற்கு ஏற்றவாறு பிரித்து கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பிரித்து கொடுப்பது எளிய முறையில் கற்றுக் கொள்ளுவதற்க்கு மட்டும் தான் பயன்படுத்தப்பட வேண்டும். இத்துடன் இப்பாடல்களின் பொருள் கொடுக்கப்பட்டுள்ளது.
நவரத்தின மீக்கூற்று1
1. பிறைநிலவும் கங்கையும் தங்கிய சடையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டவன் அருள் பாலனே! சீலனே! திருமகள் கணவன் எனும் திருமாலுக்கு இன்பமுள்ள மருமகனே! தேனே! மயிலேறுபவனே! கடம்பமாலை விளங்கிடும் திருமார்புடைய கந்தனே! கிருபை ஈசனே! விசாகனே! தேவனே! எங்கும் நிலவிடும் நித்திய ஒளியுடையக் குண்டலம் அணிந்தவனே! பெரிய வேதங்களுக்கு மூலமானவனே! மேலானவனே! வடிவேலவனே! அழிவில்லாத மண்ணுலகு மீது, துன்பமே தரும் தீவினை மிகாது ஐம்பொறிகளுடன் சேரும் மனத்தை மீறிவிடாமல், உள்ளே அடக்கியவர் காணுகின்ற மகா ஞானாசிரியனே! சிலம்பணிந்த திருவடியுடையவனே! தாமரையில் பிறந்த பிரமதேவனின் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்துதொழில்களையும் செய்தவனே! அறிவுத் தலைவா! நீதிமானே! கரிய அசுரர் கூட்டங்கள் இறக்க வலிய ஆயுதத்தைச் செலுத்திய வீரனே! தீரனே! எளியேனாகிய நான், ஐம்பொறிகளினால் வேதனை மிகுதலால் நல்ல சிந்தனை வாடப் பெற்றுக் கூகூகூகூ என்று கண்ணீர் விடுதல் உன் பெரிய தன்மைக்குப் பொருந்துமோ? ஐயனே! வா வா வா வா, விரைவாயாக! எங்கும் இருக்கும் வல்லவனே! அறிவுமிக்க தூய பராபரனே! வேதமே! தந்தையே! எனது குருவே! அருளுடைய மெய்யன்பர்கள் எப்போதும் விரும்பும் இனிய குருவே! மேலான மாயனே! இறவாது நீண்டு வாழ்வோனே! எப்போதும் நீ என் மனத்துள் இருந்து அழியாத அந்தப் பற்றுக்கள் எல்லாவற்றையும் நன்கு எரித்துவிடு! சம்புவே! சதாசிவனே! வானுலகம் அளிக்கும் அழகிய சிவந்த திருவடியைத் தந்தருள்வாயாக சருவேசா! சங்கரி, அன்னை, திகம்பரி, அழகிய சுந்தரி, காளி, மகனே! தூயனே! குளிந்த தமிழ் மாமுனியான அகத்தியர் கும்பிடும் தாமரை போலும் திருவடியுடையவனே! அழகு, ஈசுரத்தன்மை, புகழ், செல்வம், ஞானம், வீரியம் எனும் ஆறு குணங்களுடைய ஈசனே! இறையவனே!
தனதன தானத் தனத்த தனதன2
2. (மேகம் போலும் கரிய கூந்தலையும், மணம் வீசும் தனங்களையும் உடைய உமையவளான திரிபுரையின் திருக்கரங்களில் அமரும் முருகனே! தாமரைத் திருவடியுடைய விமலனே! எமது இறைவனே!)
ஆறு சிரசுகளிலும் பொருந்தச் சூடிய ஆறு கிரீடங்களுடன் தாமரை மலர் போலும் திருமுகங்கள் ஆறிலும் சொலிக்கும் ஒளியையும், அழகு உள்ள திருச்செவிகளில் அணிந்த காதணிகளையும், அழகிய திருமார்பில் சூரியனையும் சந்திரனையும் தாழ்வுறச் செய்யும் அணிகலன்களையும், வண்டுகள் மொய்க்கும் மணமுள்ள கடப்ப மாலையையும் கூடிய வடிவேலைத் திருக்கையில் பிடித்த அழகினையும், திரு இடையின்மீது கட்டிய நெருங்கிய நவமணிகளாலான அணிகலமான நாணையும் (அரைஞாண்), மணம் வீசும் திருவடியில் ஒலிக்கும் ஓசையுடன் மயில்மீது அமர்ந்திருக்கும் தன்மையினையும், ஒரு பக்கம் வில்போலும் புருவத்தாளான வச்சிராயுதமுடைய இந்திரன் மகளான தெய்வயானையும், ஒரு பக்கம் தினைப் புனங்காத்த குறத்தியான வள்ளியையும் ஒரு தெளிவோடு காணக் கிடைத்தற்குரிய வழியில் செல்லாமல், பிற சமயத்தவர்க்கு உரியதாக மிக உள் அறியாதவர் சொல்லும் மகிழ்வான பிதற்றல் இடையே உழலும் மனத்தை வீணாகச் செலுத்தி, நாள்தோறும் நிலையான ஒரு வழி தெரியாமல், உலகப்பற்று எனும் நல்வினை தீவினை என்னும் ஆசைக் கடலினுள் இன்னும் விழ வலைதனை வீசிக் கட்டுகின்ற வலிய இயமன், உலகில் மாயாத அடிமையாகித் திகைத்திடுதல் அல்லாமல், அடியவனாகி உய்தி பெறுதல் என்னும் முடிவு அறியாமல் மனம் பதைக்கும் எளியேனுடைய துன்பத்தைத் தீர்த்தருள்வாயாக!
3
3. ஏழு பெரிய கடல்களும் கொதிக்கவும், அலைகள் கட கட கட எனும் ஒலியுடன் விரைந்து நிலத்தின் மேல் விழவும், உலகமும் ஆகாயமும் வருந்தவும், அசுரர்களும் குதிரைகளும் யானைகளும் தவிடாகவும், நெருப்பு, சூரியன் ஆகியவற்றினுடைய ஒளி முற்றும் மறையவும், நிறையவும், தேவர்கள் சய சய எனப் போற்றவும், அசுரர்கள் அலறிக்கொண்டு உள்ளே உயிரை விட்டுவிடவும், ஒரு வேற்படையைக் கொண்டு பகை மிகுந்த கொடிய அசுரர்களான யானை முகமுடைய தாரகாசுரன், மலையாகவுள கிரெளஞ்சன், வலிமையுள்ள சிங்கமுகன், அசுரர்களின் அரசனான சூரபன்மன், அவனைச் சேர்ந்த செறிந்த குலம் முழுவதும் ஓழிய, ஒரு நிமிடத்திற்குள் போர் செய்யும் ஒப்பற்ற வீரனே! குளிர்ச்சியும் மலர்களும் நிறைந்த காடு செறிந்த மலையில் வாழும் குறவர்களின் இளைய மகளை அருள் உபாயத்தோடு தழுவிய குமரகுருபரனே! சரவணபவனே! குகனே! கடவுள் தலைவனே! நிலவுலகில் நாள்தோறும் அறவழி நடக்கவும், உன் இரு திருவடிகளை நினையவும், அருளினைப் பெறவும், பயனற்ற நினைவுகள் ஒழியவும், அருள்புரிகின்ற முறையை நீ அறியாயோ? பகவதி, காளி, விமலை, அமலை, திரிபுரை, பரை, புவனை, கவுரி, குமரி, பதுமை, பயிரவி. அரிய வேதங்கள் தொழுகின்ற சிவை, மரகத அயிராணி குமாரக் கடவுளின் தாய், பத்துலட்சம் சூரியர்கள் ஒளிவீசுகின்ற திருக்கயிலை மலையில் எழுந்தருளிய சடையுடைய சிவபெருமானின் மனம் மகிழும் அரிய உமை அம்மையின் முருகன் என்னும் தேவர்கள் வணங்கும் பரமேசனே! உலகில் அலையும் துன்பமான மனத்தைக் கொண்டுள்ள அடியன், உன்னை அறியும் துன்பமான மனத்தைக் கொண்டுள்ள அடியன், உன்னை அறியும் வகையை உணர அழகுறும் அறுமுகனே! இறையோனே! இனி அருள்புரிவாயாக!
தனன தந்தன தானன தந்தன4
4. பொருத்தமான அம்பலவாணர் விரும்புகின்ற பசுவதி, அம்பிகை, மாலினி, மங்களமான உமை, பரம்பரை, யாமளை, சங்கரி, உலகமாதா, ஒளிவீசும் பெரிய இரு தனங்களுடைய ஆரியை, அந்தரி, அமலை, குண்டலி, தேவி, திகம்பரி, வளையும் அரையுடைய நாரி, மதங்கி ஆகிய திருப்பெயர்களுடைய அம்மையின் மகனே! யானைமுகம் விளங்குகின்ற சிவந்த நிறமும் ஐந்து கரங்களும் உடையவன் தம்பியே! மிகுந்த அழகனே! பொற்குண்டலம் அணிந்தவனே! குளிர்ந்த ஆறுமுகனே! உலகக் கடவுளே! வானுலகத் தேவர் பொருந்திய துன்பங்கள் தொலைய வெஞ்சினம் உடைய மாயை என்னும் அரக்கியின் மைந்தர்களின் துன்பங்கள், கங்கணங்கள் உடன் அவர்களுடைய வலிய கைகளும் பொடியாகுமாறு, கூர்மையான கொடிய அம்புகளை எய்து ஒரு நொடிப்பொழுதில் வென்றவனே எனக்கு அருள்புரிவாயாக! என்று உனை நினைக்கும் அன்பில் எந்த நாளும் துதிக்கும் என்னை, உலகத் துன்பம் தினம் மிகுகின்றது. இஃது அகலுவதற்கு இன்று ஒரு வழியை அருளும்படி உன்னை வணங்கினேன்; இச்செய்தியை நீ அறியாயோ? பசி உண்டாகி அமுதை உண்டிட மிக்க அச்சமே கொள்ளும் என்றன் பல செருக்குகள் யாவும் ஓடி ஒழிய அருள் தாராய்! பல சந்திரர்கள் போல் ஒளிவீசும் திருமுகமுடைய மணமிக்க குறப் பெண்ணைத் திருமணம் புரிந்து அருள் பரவ எவ்விடமும் நிறைந்துள்ள எம் இறையோனே!
தனனதன தனனதன தனதந்த தத்தன5
5. கருங்கூந்தலின் மேல் மலர்கள் மிகுதியாகத் தரித்து, இரு காதுகளிலும் மணமுடைய செவியில் அணியத்தக்க மலர்களை நன்றாக இருக்கச் செய்து, நெற்றியில் ஒளியை மிகுதியாக வீசும் சிறு திலகங்கள் இட்டுத் தனம், மார்பு ஆகியவற்றின் மேல் கனமான பொன் அணிகலன்கள் எல்லாம் கிடைக்க, இரு கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கல கல என்று ஒலிக்க, ஒளியுடைய தனங்கள் நீண்ட தந்தங்களுடைய மலைபோன்ற யானைகளை வென்று முட்டும், அந்த இரு தனங்களில் கட்டிய கச்சில் பொருந்திய சரிகைகளின் ஒளிகள் பள பள என்று இமைக்க, இடையில் அரைப்பட்டிகையில் கிண்கிணி மணி ஒலியைத் தரச் சிறிய அடிகளில் பாத கிங்கிணி, காற்கரி சொலிக்க நெடு வீதி நடுவே, கெண்டை மீன் போன்ற இரு கண்களும் படைக்கருவியான வேலினும் விரையப் புல்வகைகளில் குற்றமில்லாத ஒளியுடைய நல்ல முத்துக்கள் தோன்றத் தாமரை மலர் போலும் முகத்தில் இனிய அழகு தோன்ற, இடையானது உடுக்கைபோன்று தெரிய, இளம் அன்னம் போன்று நடை கொண்டு தக்க சொல் தோன்றும்படி உலவுகையில் மயக்கம் தந்து, எவர்க்கும் நாள்தோறும் சேரும் முறைமையில் சேர்ந்த காமுகரிடத்துள்ள செம்பொன் அத்தனையும் தம்மிடம் வரும்படியாகச் செய்யும் வகை பல செயல்கள், அளவில்லாத துன்பத்தைக் கொடுக்கவுள்ளதாகிய பழிக்கத் தக்க மனத்தையுடைய மகளிர் இன்பத்தை, நஞ்சு போல் கருதும் அறிவை, இனி உனது அடிமையாகிய யான் பெற உன் திருவருள் தாராய்!
தாந்த தந்தன தாந்த தந்தன6
6. பெரிய வச்சிராயுதம் ஏந்திய மகேந்திரன் அழகு விளங்கும் உடம்பு முழுவதும் பெண்குறியைப் பெற நேர்ந்ததும், சந்திரனது ஒளியானது நீங்கி மைபோன்ற கரிய கறையைச் சார்ந்ததும், கடல் சூழ்ந்த இலங்கையில் நீண்ட காலம் போர் செய்து ஆண்ட அசுரனான இராவணன் அடியோடு இறந்ததும், குரங்கு அரசனான வாலியின் மார்பில் சூரிய குலத்தவனான இராமனது அம்பு பாய்ந்ததும், நற்குணமான அன்பு மிகுந்த பஞ்சபாண்டவர்கள் ஆகிய பாண்டுவின் புதல்வர்களின் பகை அரசனான துரியோதனன் இறந்ததும், தவத்தோர் செய்த செம்மையான தவ ஒழுக்கம் ஒய்ந்ததும், பின்பு, மணக் குழம்புகள் தோய்ந்த மாதர் கொங்கை மோகத்தில் வீழ்வர் என்று அவருடைய இருள் மலம் எனும் ஆணவமலத்தை அழிக்கும் ஓர் ஆண்டவனுடைய திருவடிகளைச் சேர்ந்த தொண்டர்கள் ஆராய்ந்து கூறிய கருத்துகளை, அறிந்துகொண்ட எனது மனம் எனும் உள் இடமாகிய உண்மைத் தாமரை மலர் மேல் எழுந்தருளிய தேவனே! ஆழமான குளிர்ந்த கடல் போன்ற கங்கையில் நீந்தி வந்து, அகில அண்டங்கள் எங்கும் ஆட்சிபுரிந்து அருந்தவம் உடையவர் துதிக்கின்ற சங்ககரியுடைய அழகிய கச்சணிந்த தனங்களில் பாலைப் பருகிக்கடம்ப மாலை அணிந்து, தேவர்கள் வேண்டுதல் கண்டு, ஒளி வீசும் மலர்க் கைகளில் வேற்படை தாங்கிப் போர்க்களத்திடைச் சென்று, எதிர்த்தவர்கள் மாண்டு ஒழியும்படிக் கோபித்த கந்தனே! என் குலக்கடவுளே! உன்னுடைய கழல் பூண்ட திருவடிகளை எனக்குத் தரவேண்டும்.
தானன தானத் தனத்த தந்தன7
7.மாதர்களின் வயிற்றுள் கருவாக இருக்கவும் பின்பு பெரிய உலகத்தில் வந்து பிறக்கவும், பல அணிகலன்களை உடம்பில் அணிந்துகொள்ளவும் ஆக வளர்ந்து தவழ்கின்ற பருவத்தில் சில பொழுதுகளில் போளி போன்ற உணவைப் புசிக்கவும், சிறு இளையவர்களுடன் குலாவியிருக்கவும், மண்ணுலகில் வாழுதற்கு அமைந்த கூடாப்பொருந்திய இரத்தம், தோல், எழும்பு ஆகியவை அமைந்த உடம்பு விரைவாகப் பெருக்கவும், செழுமையான தசை மிகுதியாக வளர்ந்து தடிக்கவும், விலைமாதர்களுடைய வீடுகளான வீதிகளில் இரவில் கிடக்கவும், அறிவாளிகள் கண்டால் சிரிக்கவும், போர் செய்யும் மன்மதவேளின் மலர் அம்புகள் மார்பினைத் துளைக்கவும், மயக்கம் மிகுதியான பெரிய ஆவலில் பெண்களைக் கூடவும், முன்னோர்கள் தேடிய செல்வத்தைத் தொலைக்கவும், குடிகள் பலரும் ஏசிப் பழிக்கவும், பின்னர் உரியவர்கள் தாம் ஒரு பெண்ணைப் பார்த்து மணம் செய்விக்கவும், அதனால் சமுசாரத்தில் வீழ்ந்து கரையேற முடியாமல் திகைக்கவும், துன்பந்தரும் நோய்கள் மிகுந்து உடல் நலத்தையும் ஆயுளையும் குறைக்கவும், கடைசியிலே, மிக்க தீவிரமாகக் கோடரி ஏந்தி இயமன் உயிரைப் பிடிக்கவும் மறைவிடமான சுடுகாட்டுள் வைக்கவும் வழி செய்யும் கருவில் நுழையாமல், குளிர்ந்த அன்பானவரைத் துதிக்கவும், இன்பக்கடலை வாரிக் குடிக்கவும், சிற்சபைக் கடம்பனே! எனது இறையோனே, புகழ் சேர்ந்த அருளைத் தந்தருள்வாயாக!
தத்தத் தத்தன தத்தன தந்தன8
8. நச்சுப்பல்லுடைய பாம்பை அணிந்துள்ள சங்கரனின் இடப்பாகத்தில் உறைந்து இணையில்லாமல் ஒளிவீசும் அம்பிகை சத்தான சிவனும் சத்தியான பார்வதியும் பெற்ற சிறந்த முருகோனே! தத்தித் தத்திதி தத்தத திங்கண தத்தித் தத்திதி தத்தன என்று அழகிய கூத்தினை எட்டுத் திசையிலும் செய்த மயில் வாகனத்தைச் செலுத்திப் புதிய அமுதமயமான பழத்தைப் பெறுதற்பொருட்டு, அழகிய அலகினைச் சுற்றி வந்த தீவிரமான சகதீசனே! ஒளி பொருந்திய திருக்கையில் வேற்படையைப் பிடித்து, அசுரனுடைய வானுலகச் செல்வங்கள் முழுவதும் ஒழிந்திடவும், தமக்கு விருப்பமான பக்தர் வளமுடன் வாழ வந்த சண்முகக் கடவுளே! சுட்டுக் கொட்டை பரப்பி இலங்கையில் வேலைப் பாடமைந்த பத்து முடியணிந்த தலைகளுடைய இராவணனுடைய திரளான சுற்றத்தை அம்பெய்து வெற்றிகொண்ட இராமபிரானின் மருமகனே! துக்கத்தை ஒழிக்கும் அழகிய மலையான திருச்செந்திலிலும், வளத்தைப் பெற்று உயர்ந்து விளங்கும் அழகிய குன்றுகளிலும் சொர்க்கலோகத்திலும் ஆகிய அனைத்து இடங்களிலும் இருந்துள்ள குருநாதனே! செத்துச் செத்துப் பிறக்கும் உடம்பினைப் பெற்ற பயனைத் தேவர்களின் துன்பம் மிகுந்த மனத்தின் மூலம் நீ அறியவில்லையோ? அன்பர்களின் பக்திக்கு வயப்படும் தன்மை கொண்ட எண்குணக் கடவுளே! உன் அன்பைப் பெறும் விருப்பம் மிகுந்த என்னைச் சுத்தத்துள் வைத்தருள்வாயாக!
தனதன தானந் தனதன தனதன9
9. நவரத்தினங்கள் பொருந்திய ஒளி வீசும் சிலம்பினை அணியும் திருவடிகளையுடைய குகனே! அழகனே! திருமார்பில் மிக்க தேன் சொரியும் கடப்பமாலை புரளும் தேவர்கள் தலைவன் எனும் வடிவேலனே! இன்சுவைமிக்க அமுதத்தை உண்ணும் தேவர்கள் எக்காலத்தும் உன் திருவடியை வணங்கும் முதல்வனே! வேதங்கள் எல்லாம் துதி செய்யும் ஒரு தலைவனே! திருக்கூத்து ஆனந்தம் மிகுந்திடும் பொற்சபையில் எழுந்தருளியுள்ள இம்மண்ணுலகத்திற்கும் அந்த விண்ணுலகத்திற்கும் குருவே! குன்றில் வாழும் குறவர் மகள் மகிழ்ச்சி அடைய அழகிய மயில்வாகனத்தில் ஏறும் சரவணபவனே! சிவனே! சுகதேவனே! என்னை ஒரு பொழுதும் பிரியாமல் இருள் போன்ற ஆணவமலத்தையும் பிறமலத்தையும் கெடுப்பாயாக! கெடுப்பாயாக! பகைத்துன்பம் எரித்தருள்வாயாக! எரித்தருள்வாயாக! மயக்கத்தைச் செய்யும் பெரும் கவலைகள் யாவற்றையும் பொடிப்பொடியாக்கி யருள்வாயாக! தொடர்ந்து வருகின்ற பிறப்புக்கள் எல்லாவற்றையும் தடுத்தருள்வாயாக! தடுத்தருள்வாயாக! மணம் கமழும் உன் திருவடிகளை எனக்குக் கொடுத்தருள்வாயாக! கொடுத்தருள்வாயாக! ஒலிக்கும் கடல் சூழ்ந்த மண்ணுலகில் அன்பினால் உன்னுடைய அடியார்களின் இருதயத்தில் எழுந்தருளும் பரமனே! சின்மயனே! மிக்க மணம் வீசும் கூந்தலையுடைய மலைமகளான உமையம்மை முதல் அன்னை, சிவை, அழகுநிறை சங்கரி, பயிரவி, திரிபுரை, பரை, அங்கயற்கண்ணி, மரகதவல்லி, விற்போலும் நுதலுடைய அம்பிகையுடைய ஒப்பற்ற திருமுருகோனே! நான்முகனாரின் கருவம் அழியும்படி உயர்ந்த பிரணவத்தின் பொருளைக் கேட்ட தூய கடவுளே! துன்பம் இல்லாத இன்பத்தை நுகரும் அருணகிரிநாதர் புகழும் இறையோனே!