பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்

இரண்டாம் மண்டலம் இசை

முதற்கண்டம் இசை


வரி எண் பதிகம் பெயர் மற்றும் நன்மை மொத்தம் பாடல்கள் திரும்பி போக
12. திருச்சோலைமலை 10

திருச்சோலைமலை

பாடல் - திருச்சோலைமலை (நாகரஅவேதுகைக் கலிநிலைத்துறை)

பண் - இந்தளம்
தேவாரப் பாடல் - பித்தா பிறைசூடி
இராகம் - நாதநாமக்கிய
தாளம் - ரூபகம்

நின்னையே சிவமா யறுமுனி வருந்துதி நிகழ்த்திப்
பன்னொணா நலமே படைத்துய்ய வருளிய பரனே
மன்னுமா சோலை மலைமனா வுன்பதம் வணங்கற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் றலையே.  ..  1

சென்னிநா லுடையா னனுதினம் பழிச்சிடு தெய்வம்
என்னவே துலங்கிப் பவளத்தின் றிரளென வியங்கும்
நென்னடைச் சோலை மலைமனா நின்மொழி கேட்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் செவியே.   ..  2

வன்னிசேர் நுதற்கண் ணாறுடை யோய்கதிர் வடிவேல்
மின்னுபூங் கரனே வானவ ரேத்தருள் விதுரா
பன்னமார் சோலை மலைமனா நின்னிலை பார்க்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநல் விழியே.  ..  3

அன்னையா யயனா யனுதினம் வழிபடு மடியேன்
தன்னுளே யுணர்வாய்ச் சுடர்பொரு ளாயுள்ள சாமீ
முன்னைசேர் சோலை மலைமனா நின்சரண் முகக்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் மூக்கே.  ..  4

மின்னுவா னவர்மன் மயிலென வரவதன் மேலே
உன்னியே றிமகா நிசிசர ருயிர்தொலைத் துள்ளோய்
மன்னுமா சோலை மலைமனா நின்னடி வாழ்த்தற்
கென னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் னாவே   ..  5

பின்னைகேள் வனயன் பிறங்கெழின் முனிவரர் பிறரும்
உன்னியே கணித்தற் கமைவறு பெருந்தகை யுடையோய்
துன்னுமா சோலை மலைமனா நின்சரண் டொழமுன்
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் கரமே.   ..  6

தென்னிலா வொளிவிஞ் சறுமுகத் திளமையந் தேவாய்ச்
சொன்னநீ ளயிற்கை யிலகடி கேண்மனத் தூயோர்
மின்னிவாழ் சோலை மலைமனா நின்றல மிதிக்க
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநற் காலே.  ..  7

முன்னைநா ளாரியவ தாரவல் லேனத்தின் முரணார்
சென்னிகே டுறவொண் மருப்பினைப் பறித்தவொர் திறலோய்
அன்னமூர் சோலை மலைமனா நின்பொடி யணிய
என்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநல் லுடம்பே.   ..  8

அன்னவா கனனை யருஞ்சிறைப் படுத்திமெய் யறிவால்
பன்னகா பரணற் கோமுதற் பொருடனைப் பகர்ந்தோய்
கன்னல்சூழ் சோலை மலைமனா நின்கழல் கருதற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் மனமே.   ..  9

பன்னொணாப் புகழ்தான் படித்தவன் றனைத்திருப் பாரிவால்
இன்னீனத் திருக்க வுரைத்தசின் மயதின வெழிறான்
மின்னுமா சோலை மலைமனா நின்னருள் வேண்டற்
கென்னமா தவஞ்செய் துள்ளதோ வெனதுநன் னெஞ்சே.  ..  10

கலியுகம் 4995 நந்தன (கி.பி.1893) பங்குனி மாதம் 23ஆம் தேதி சோமவாரம்