நீங்கள் இங்கே உள்ளீர்கள் »முகப்பு » பாடல் »ஐந்தாவது மண்டலம் பாடல்கள்
ஐந்தாவது மண்டலம் பாடல்கள்
ஐந்தாவது மண்டலம் சிறு குறிப்பு
திருப்பா எனும் பெயரிய திவ்விய நூல் ஒன்றே இம் மண்டலத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூல் இரண்டு புத்தகங்களாக அமைந்தவை.
முதற் புத்தகத்தில், நூற்சிறப்பு, திருப்பத்தட்டவணை திருப்பாட்டு முதற்குறிப்பு அகராதி, மேற்கோள் பனுவல்களின் பெயர்கள், விடயங்களும் பக்கங்களும், நூன்முகம், திருப்பாமூலமும் திட்பம் எனும் உரையும், வேதாந்த சித்தாந்த சமரசப்படத்துடன் உள்ளது.
இரண்டாம் புத்தகத்தில், திருப்பத்து அகராதி, திருப்பாட்டு முதற்குறிப்பு அகராதி, திருப்பா மூலமும் குறிப்புரையும், எஞ்சிய பாடல்களுக்கு அரும்பத விளக்கங்களுடன், சிவலிங்காகார படம், குழைத்துப்பத்து கூறுமாறு இரண்டு உண்டு என்பது பற்றி நிகழ் பொருள், பெருமிறைக் கவியுரை, மற்றம் அதன் சுருக்கம் போன்றவை அடங்கியுள்ளன.
இந்நூலில் உள்ள பாக்கள் 1101ம் சுவாமிகள் துறவற நிலை எய்திய பின்னர், துர்முகி வருடம் மாதி மாத மகாமக வெல்லையில் (கி.பி. 1897) தில்லையை அடுத்த பின்னத்தூர், குயவன் பேட்டை போன்ற சிற்றுர்கள் தங்கிய நாட்களில் அருளினார்கள்.
uஉபநிடதங்கள் 54, வேதபாகங்கள், ஆகமங்கள், ஸ்ம்ருதி, வடமொழி தென்மொழி புராணேதிகாசங்கள் ஸூத்திரங்கள், பாஷ்யங்கள், தமிழ் மறைகளான சிவஞான போதம், திருமந்திரம், முதலியனவுடனும், ஸ்ரீ அருணகிரி நாதர், ஸ்ரீமத் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் அருளிய பாடல்களுடன், இலக்கண நூல், நிகண்டு பைபிள் முதலியவைகளாம். திருப்பா என்பதற்கு மேன்மையான பாட்டு எனவும், முழுமுதற் பரம் பொருள் தோத்திரப் பாக்களாகவும், சாஸ்திர ஆராய்ச்சிப் பாடல்களாகவும், அகர உயிர் எல்லா எழுத்திலும் பரவியிருப்பது போல, எப்பொருளிலும் கலந்து விளங்கும் இறையின் பரத்வம் பகரும் நூல் இஃது என்றும், இந்நூலை ஓதின் பிறவி அறும் என்ற முடிந்த முடிவை கூறும்.
திருப்பா எனும் இந்நூலில் விளக்கப்பட்டுள்ள பேருண்மைகளில் சிலவற்றைக் காண்போம்.
செல்வர் என்பவர், காலச்சக்கர கதிப்படி வந்து போகும் செல்வம் உடையவர், நான், எனது, எனும் செருக்கு இல்லா நல் வழியில் செல்பவரும் செல்வரே.
குகபிரானது மகிமையை சூரனுக்கும், பதுமனுக்கும் முன்னொரு கல்பத்தில் அகஸ்தியர் போதித்தார்.
இதயாம்பரத்தில் தியானம் ஒரு மூர்த்தி பாவனையிலேயே கூடும். ஆதலால் பலமூர்த்தி வழிபாடு பந்தமாம்.
ஒருவன், தன்னை எத்துணை மகிமைப்படுத்திக் கொள்ளினும் மனிதன் மனிதனேயாவான்.
சிவயோக ஞானிகட்கு குமரகுரு தோன்றாளன்றி வேறு பற்றுக் கோடு பயன்படா.
மறுபிறப்பு எய்தாதிருக்க, இருதயார்ச்சனத்தைச் செய்தல் வேண்டும். வெளியார்ச்சனத்தை விடல் வேண்டும்.
ஆன்மா சுயம்பு லிங்கம், அதன்கட் புரியும் அந்தர்யாக பூசை, ஏனை பூசனை எதினும் சிறப்புடைத்து.
மூலாதாரத்து இருந்து முதுகெலும்பின் நடுவாக மேலே செல்லத்தக்கதும், இடைபிங்கலை என்னும் இரண்டு நாடிகட்கும் நடுவண் விளங்கத்தக்கதுமான பிரம நாடியின் செயலை முன்னாக்கிக் கொள்ளும் கருமம் அல்லாததாகவும், மூக்குநுனிபார்த்தல், முதலிய காட்சிகளோடு அக்ஷரங்களை உச்சரிக்கும் மார்க்கமும் அல்லாததாகவும், புண்ணிய கருமம் புரிதல், விரத நோற்றல், மூர்த்தி, தலம், இவற்றினைத் தொழுதல், தீர்த்தங்களில் மூழ்குதல் இல்லாத வழியாவும், எங்கும் நிறை தன்மையாகவும், ஒன்று, இரண்டு, என வாதிக்கும் குற்றமற்ற மெளன முத்திரை எனப்பட்டதுமான கல்லால விருக்ஷத்தின் கீழ் அமர்ந்து நால்வர்க்கு கைகாட்டி உபதேசித்தருளிய தகாரலயப் பேரிரகசிய மார்க்கமே சிறந்தது. இதுவே சுவாமிகளின் முடிவான சித்தாந்தம்.
iஇறந்தார் நன்மையின் பொருட்டு இயன்றவாறு இயற்றும் உத்தரகிரியைகளை தடுத்தலும் விவேகமாகாது.
மற்றும் வேதமகா வாக்கியங்களின் பொருள் விளக்கியும், துறவு மேன்மை, திருநீறு, உருத்திராக்கம், சிவலிங்கம், ஓங்காரம், முதலியவை பற்றிய தத்துவ விளக்கம், சகள நிட்களம், அத்துவா, சரியையாதி நான்கின் நுட்பம் போன்ற பல உண்மைகளை உள்ளடக்கிய நூலாகும் இது.
இந்நூலில் பொதிந்துள்ள கருத்துக்களை நம் சிந்தைக்கும் செயலுக்கும் ஆக்கினால் கரு நோய் அகலும். திட்பம் எனும் பெயரில் அமைந்துள்ள விசேட விரிவுரை பன்முறையும் படித்துணர வேண்டியவைகளேயாம். இந்நூலில் அடங்கிய பதிகங்கள், பாடல்களின் பாவினங்கள், பதிகப் பாடல்களின் எண்ணிக்கை முதலிய அடங்கிய அட்டவணை ஒன்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.