நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »இரண்டாம் மண்டலம் இசை»முதற்கண்டம்
இரண்டாம் மண்டலம் இசை
முதற்கண்டம் இசை
வரி எண் | பதிகம் பெயர் மற்றும் நன்மை | மொத்தம் பாடல்கள் | திரும்பி போக |
---|---|---|---|
9. | திருச்சீரலைவாய் | 10 | |
பலன் | நம்மை அறியாமல் ஷடக்ஷர மந்திரம் ஜெபம் செய்ய வேண்டுமா?
|
திருச்சீரலைவாய்
பாடல் - திருச்சீரலைவாய்
பண் - பஞ்சமம்;
தேவாரப் பாடல் - தானெனை முன்படைத்தான்
இராகம் - ஆகிரி;
தாளம் - ரூபகம்
பனியருட் சே பவளச்செவ் வாயா
பச்சைமா லயன்பணி பாதா
புனித குணாளா புகழ்பவர் தோழா
பொன்றிடா வண்டர்தம் பரனே
எனைமறக் காதிங் கருளிசைப்பவனே
யெழிற்செழுஞ் சீரலை வாயா
தனிநிலைச் சுகனே யுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 1
நண்ணுவா ருறவே யெண்ணுவா ரிறையே
நான்மறை முடிவிற்சொல் பொருளே
மண்ணும்வா னகமும் பண்ணுமாள் வினைஞா
மட்டிலா நடனவெம் பரனே
உண்ணும்வா னமுதே கன்னலா ரிழுதே
யுயர்நிலைச் சீரலை வாயா
தண்ணமார் சரணா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 2
துடியிடைக் குறமா தணிமடச் சுரமா
துடையரு மாமணத் தோழா
நடமயிற் பாரியா பிரியகப் பிரியா
நானடி தொழுநறும் பரனே
சுடர்மணித் தளையா வடலயிற் றலைவா
துணிநிலைச் சீரலை வாயா
தடவருட் புரணா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 3
அருளகக் கலியே லயமுதிப் பிலியே
யமுத சுகோதயப் பிழம்பே
தெருண் மணித் திரளே குருமணிப் பொருளே
தீவினை தீக்குமெம் பரனே
மருமலர்க் கரனே யடிகளுக் கரனே
மணிநிலைச் சீரலை வாயா
தருணதற் பரனே யுனை மறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே
.. 4
கிளர்சிவக் கொழுந்தே தவர்மனக் கரும்பே
கெழுவருண் மாமணிக் குலமே
வளர்நலக் கிழியே யகவிளக் கொளியே
மனமய றீர்க்குமெம் பரனே
களிமனத் துமையா ளருள்ரசக் கனியே
கயநிலைச் சீரலை வாயா
தளைமணிச் சரணா யுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 5
தமநிறங் காட்டா வியன்வெளிக் கூத்தா
சங்கரா பண்டைமா தேவா
சுமனச மெளலீ திமிரமில் சோதீ
சுந்தரா தொண்டனேன் பரனே
இமையவர் ஞாட்பா நிறைவுடை யாப்தா
வெழினிலைச் சீரலை வாயா
சமரச சுகுணா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 6
சுகுணபொக் கிமே விகதபெட் டகமே
சுதைபழுத் தொழுகுகற் பகமே
இகுளையுற் றுயர்வோர் பிரபலப் பொருளே
யெந்தையே தொண்டனேன் பரனே
விகலமற் றொளிர்மா தவபலச் சுடரே
வியனிலைச் சீரலை வாயா
சகலவற் புதனே யுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 7
புலனொடுக் கிடுவோ ரகநடிப் பவனே
புந்தியார் பூத வனீகா
சிலைமதன் படிவம் பொடிபட விழித்தோர்
செல்வனே வல்லவெம் பரனே
அலைகடற் றிரைவீ சொலிமலி வளநா
டகழ்நிலைச் சீரலை வாயா
சலமலர்ச் சரணா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 8
துதிபணிப் படிப்போர் விதியினைக் கிழிப்போய்
சுபகரச் செருக்கினைத் தருவோய்
முதுமறைக் கவைக்குண் ணிதமொளித திருப்போய்
மொடுமொழி கூறுமெம் பரனே
இதமரைக் கமலா சனத்துறை குமரா
விளைநிலைச் சீரலை வாயா
சததள சரணா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே .. 9
பவமழிப் பவனே சிவமளிப் பவனே
பாரிவுடைத் துவிநவ நயனா
நவமொழிப் புகழ்பாச் சொலினவர்க் கிறையே
நச்சினார்க் கினியவெம் பரனே
உவமையிற் படியா வடிவுடைத் திருவே
யுறைநிலைச் சீரலை வாயா
தவவருட் சனகா வுனைமறக் கினுநா
சாற்றிடுஞ் சரவண பவவே
.. 10