பாம்பன் ஶ்ரீமத் குமரகுருதாச சுவாமிகளுக்கு கணிணி மற்றும் இணைய தளம் மூலம் தொண்டு செய்ய விரும்பும் அடியார்கள் உடனடியாக தேவைப்படுகின்றது. விருப்பம் உள்ளவர்கள் எங்கள் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கவும்.

ஆங்கிலம் தமிழ்

Recording of Srimath Pamban Swamigal Guru Pooja telecasted on 4th June 2018, 4.00 PM to 7 PM.


பரிகாரங்கள் செய்வதைவிட அருளாளர்கள் அருளிய பதிகங்கள்
ஓதி அல்லது பாடி நம் வினையை தீர்த்துக் கொள்ளலாம்

நீங்கள் இங்கே உள்ளீர்கள் » முகப்பு » பாடல் »பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்

பாம்பன் சுவாமிகள் அருளிய உரைநடை நூல்கள்


பரமசிவமென்பதைக் குறித்தவியாசம்

மறுதினோதயத்தில் விஷயப்பிரியன் வித்யாரண்யனைத் தரிசித்து வாழ்த்தி இதனை இயம்புகின்றனன்.

சிஷியன்: பரமசிவ வர்த்தமானங்களை அடுத்த வியாசத்தி லருள்வேமென்று நேற்றையத்தினம் நிகழ்த்தி யிருக்கிறீர்கள். ஆனால், அந்தப் பரமசிவ மென்பதைப் பஞ்சகர்த்தாக்களி லொன்றென் றுள்க லாமோ?

குரு: அவர்கட்கு மதீதப்பட்டிருக்கின்ற ஸ்வயம் பிரகாச வஸ்தென்னும் பரப் பிரம்மமாய் விளங்கிக் கொண்டிருப்பதொன்றே பரமசிவமென் றறியக் கடவாய்! அதீதப்பட்ட தெப்படியென்னில் ரூபமா யுள்ள பிரம விஷ்ணு உருத்திர மகேஸ்வர வென்னும் நான்கு கர்த்தாக்கட்கும், அதன்மேல் ரூபாரூபமாயுள்ள சதாசிவ மூர்த்திக்கும் மேலதாய், அரூபமாயிராநின்ற பிந்து நாதம் சத்தி சிவம் என்ற நான்காகவும் விளங்கு மென்பதாம். இவ் வொன்பதையுமே சிவபேத மென் றுரைக்கப்படும். பதமூர்த்திகளாகிய அனந்தேசுரர், ஸ்ரீகண்டர், காலச்செந்தீ யுருத்திரர், ஏகாதசவுருத்திரர், துவாதசவுருத்திரர், புத்தியஷ்டகர், கூர்மாண்டர், ஆடகர், சதவுருத்திரர், அஷ்ட மூர்த்திகள், நீலலோகிதர், கங்காளகபாலர், அஸ்வா ரோகணர், அஷ்டபைரவர், வீரபத்திரர் முதலியவர்களையும் உருத்திர ருரு வடைந்த 11 கோடி யுருத்திரர்களையும், அவருரு வந்தடைந்தோர்களை யும்,நாமமுடையோர்களையும், அவர் நாமமுடையோர்களையும், அக்கினி தேவனையும், பதத் தலைவர்களாகிய கபாலிகன், அசன், புதன், வஜ்ரதேகன், பிநாகி, கிருதசாதிபன், உருத்திரன், பிங்கலன், சாந்தன், க்ஷயாந்தகன், பெலவான், அதிபெலவான், மஹா பெலவான், பாசரத்தன், சுவேதன், ஜெயபத்ரன், தீர்க்கபாகு, ஜெலாந்தகன், மேக வாகனன், சௌமியகேசன், ஜடாதரன், ரத்னந்திரன், ஸ்ரீதரன், பிரசாதன், பிரகாசன், வித்யாதிபன், ஈசன், சர்வக்ஞன்,பெலிப்பிரியன், சம்பு, விபு, கணாத்தியக்ஷன், கிரியக்ஷன், திரிலோசனன் முதலியவர்களையும், சிவனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், உருத்திரனாற் சிருஷ்டிக்கப்பட்டவர்களையும், அவர்கணங்களையும் ஆகுபெயராற் சிவனெனு நாமம் சென்றபடி யுரைப்ப துண்டு. ஆதலால், ஈண்டு குறிக்கப்பட்ட சிவனெனப்படுவாரெல்லாம் அவ் வதீதச் சிவனல்லவாம். ஸ்ரீகண்ட ரென்பவர் - பிரகிருதியின் கீழுள்ளகிருத்திய மைந்தையும் நடத்தும் அனந்தேசுரர் வாயிலாகத் தம்மை யதிஷ்டித்து நின்று நடத்தப்படுகிற சிவபெருமானுடைய முத்தொழில்களையும் பிரமா விஷ்ணு காலவுருத்திர ரென்பவர்களை யதிஷ்டித்து நின்று நடத்துபவராயும், பிரம விஷ்ணு முதலிய தேவர் முனிவர் அறுபத்துமூவர் முதலாயினோர்கட்கு நிக்கிரக அநுக்ரகங்களைச் செய்யுங் கர்த்தாவாயும், சைவம் புகுந்து சமயதீக்ஷை பெற்றவர் வழிபடும் மூர்த்தியாயுமுள்ள வுருத்திரராவார். மேலே ரூபாரூப மென்றது உருவும் அருவுமில்லாததாகும். எப்படியேல், ஸ்தூலமுள்ள வொருவன் அபமிருத்தியுவைத்தள்ளற்கான காயகற்பங்களை யுண்டு ஸ்தூலத் தைப் பொன்மயமாக்கி அதன்மேற் பிராணா யாம யோகத்தால் இப்பாலிருந்து பார்க்க அப்பாலுங் தோன்றுங் கண்ணாடி போன்ற பிம்ப பிரகாச தேகியாகி அதன்மேன் மந்திர சித்தியாகிய தவத்தால் தேவ அருளால் மேனவின்ற பிரகாச வடிவமும் இலகுவாய்க் கரைந்து மனிதர் கட்புலனுக் கெட்டாச் சூக்கும வடிவ த்தை அதாவது தெய்வீக வுடம்பைப் பெற்று ஜனனமரணமும் ஊணுறக்க சஞ்சலமுமின்றி யிருக்குந் தன்மை போலாம். ஆனால், அவ்வுடம்பு கைப்பிடிக் சுகப்படத் தக்கதுதான். சதாசிவ சொரூபம் அப்படியகப்படா.

சிஷி: ஆயின் சிவமெனும் நாமத்திற்குத்தா னருத்தமென்னை?

குரு: சிவமென்பது: மோக்கம். அம்மோக்க மாகிய கேடற்ற முத்தியை நல்கும் பகவா னெவனோ அவனே சிவனென்றாம்.

சிஷி: அம்முத்தியை நல்குவது அதீதச் சிவனன்றி வேறின்றோ?

குரு: அவனருளின்றி அஃதெஞ்ஞான்று மின்று.

சிஷி: அற்றேல், ஏனையோர்கட்குஞ் சிவனெனும் பெயர் எதால் வந்தது?

குரு: சிவ மெனும் மோக்ஷமானது சர்வோபாதியு நசித்த சூனியமாதலால், பிரவிருத்திக்கு நிவர்த்தியா யேற்பட்ட சம்ஹார கர்த்தாக்களாகிய உருத்திராதி தேவதைகட்கும் அவர் கணங்களாதியோர்க்கும் தொழிலால் அப்பெயர் வரலாயிற்று. நிற்க, ருத்தரமென்பது: அக்கினியென வடமொழியிற் பொருள் படுகின்றமையால், அக்கினி ஸ்படிவமாகிய உருத்திரருக்கும் அவர் கணங் கட்கும் உருத்திரரென ஆகுபெயராலழைக்கப்படும். இன்னமும், தேவர்கள் பொருட்டும் அடியார்கள் பொருட்டும் பல வேடங்கொண்டு திருவிளையாடல் கள் புரிந்தது குறித்து குறிப்புப்பொருள் செம்பொருள் படும்படிக்கான நாமங் கள் அனந்தமாய் வந்திருக்கிறதென்றும், இத்தியாதி காரணங்களனைத்தும் சிவனுக்குச் சகள லீலையென்றும், அந்த லீலைக் கதீதப்பட்டு ஸ்வயம்புவாய் ஆதியந்தமற்ற அனாதியாய் நிற்பதையே சிவனுக்கு நிஷ்கள மென்று முணர் வாயாக!

சிஷி: உணர்ந்தேன். பிரவிருத்திக்கு நிவிர்த்தியா யேற்பட்ட சம்ஹார கிருத்திய மானது - இயற்றுவார்க்குச் சிவனெனும் பெயரை நல்குவதாயின், அந்தச் சிவனெனப்படுவார் சர்வநாச சகிதர் தானோ?

குரு: என்ன போதித்துங் குதர்க்கம் விட்டிலை. இதனால் நீ குதர்க்கியே. ஓ! குதர்க்கீ! அதுபற்றி யின்னு மியம்புதுங்கேள்! எல்லா ஆத்மாக்களுக்கும் சகல துக்க அஞ்ஞான சந்தேக பாவமென்பவைகளை நாசஞ்செய்து தெளிவைக் கொடுக்கின்றதே நிஷ்கள சகளச் சிவன் றன்மையாகும். அத்தெளிவினாற் றானாகிய வஸ்துவை யுணர்ந்து சாயுஜ்ய மென்கிற ஐக்யமாய்ச் சிவத்திற் சேர்வதே ஜன்மரகித முத்தியாகும். இதனால், சிவனெனுந் தன்மை சர்வபாவ நாசமென்றும், உருத்திரனெனுந் தன்மை துஷ்ட நிக்கிரகமென்றும், இவை யில்லாவிடில் ஜீவர்கட்கு நன்மை யெவ்வளவேனும் பயக்காதென்றும், சகல நியாயத் தீர்ப்பும் இன்னணமிருந்து முடிவில் சர்வ சம்ஹார பையிரவமாகவு நடிக்குமென்றும், மாயா தோற்றமாகியவிஷ்ணு பிர்மாக்களை முடிப்பதே சர்வ சம்ஹாரமென்று மெண்ணுக!

சிஷி: இப்போழ் துரைத்த பாவநாசம் துஷ்ட நிக்ரக முதலியவனைத்துக்கும் ஈஸ்வரனாயும் மோக்கத்திற்குப் பரப்பிரம்மமாயு மிருப்பவர் விஷ்ணுவேயல் லாது வேறில்லையென்றும், அதே விதமாய்ப் பிரமாவைத் தவிர வேறில்லை யென்றும் பலவாறு சின்னூற்கள் பகர்வதென்னை?

குரு: மனிதர்களில் முமூட்சுத்துவத்தையடைந்த சுத்த ஞானியைத் தேவனாய் யாவருந் தரிசித் துபாசிப்பதாங்கு, மூல விஷ்ணுவுஞ் சர்வஞ்ஞத்துவ சர்வஞான சொரூபியாய்ப் பிரபஞ்சாதீத மாயாகுகையில் ஈஸ்வரனென்றும் துரியப் பிரம மென்றுமே சொல்லப்படும். அதேவிதமாய்ப் பிரமாதி தேவதைகளையு மெண்ணவேண்டும். நிற்க; முன்னொருகால் நீ நிகழ்த்துவண்ணம் " மாயை யால் உலகி லுண்மை யிழந்து தங்களைப் பரத்துவமாகப் பேசிக்கொள்ளப் படுவதைக் கடிந்து உண்மைஞானம் பிரகாசிக்கும்படியருள்க " என்று பிரம விஷ்ணுக்களே பரமசிவனிடம் விண்ணப்பித்துக் கொண்டதை ஸ்ரீகந்த புராணத்தின் பாயிரத்தினு மறியலாம். ஆதலால், உண்மையுளுண்மையாயும் எத்தேவர்களின் அறிவாயும் விளங்குவது பரமசிவமேயாம்.

சிஷி: அம்மூலவிஷ்ணு க்ஞான முடையவராய் சிவகட்டளையை வதியப்பெற்ற வராயிருக்க, அவரைச் சத்தியாகிய மாயையின் றோற்றமென்றும் மாலென்றும் சொல்லுவதி யாது?

குரு: பரமாணுவிற் றோன்றிய மாயையின் பிரகிருதி தோற்றங்களாகிய அண்ட கோடிகளெல்லாம் அயனாற் சிருஷ்டிக்கப்பட்டதென்றும், அவ்வயனுக்கு விஷ்ணுவுந்தியாகிய வனசம் பிறப்பிடமாகுமென்றும்,அதினால் விஷ்ணுவுந்தி யிலுலகங்க ளடக்கமென்றும்,அம்மாயை புருஷரூபமாய்ச் சொரூபப்பட்டதில் விஷ்ணு மாயைக்குப் பிரதான வடிவமென்றும், மாயையின் காரியங்களாகிய புவனரக்ஷணையே அவருக்குப் பிரகிருத தொழிலென்றும், இரக்ஷணைக்காதாரம் அம்புதமாதலால் அந்த ஸ்தானமே அவருக்குப் பள்ளியாகுமென்றும் புராண கலைகள் புகலுவதால் மாயையின் றோற்றமெனப்படுமென்றும், தாருகாவ னத்தவர் நிமித்தம் சிவன் பிக்ஷாடன வடிவங் கொண்டபோ துண்டான மிக்க வழகினை மோஹினியுருவான விஷ்ணு கண்டு மோஹித்ததால் மால் என்ற நாமம் வந்ததென்றும், இன்னும் பல காரணங்கள்பற்றி அவருக்கு அனந்த நாமங்க ளேற்பட்டன வென்றும், இவைகளெல்லாந் திருலீலைக்குள்ளான விஷ்ணுலீலையாகு மென்றுந் தெளிய வெளியாம்.

சிஷி: இத்தகைய மாட்சிமை தங்கிய மஹா விஷ்ணுவைக் குறித்து " விஷ்ணு வைத் தரிசிக்கிறதினாலேயே சிவத்துரோக முண்டாகிறது, சிவனுக்குத் துரோகஞ் செய்வதனாலேயே பயங்கரமான நரகத்தையடைகிறார்கள் சந்தேக மில்லை, அதனா லொருபோதும் விஷ்ணுவின் பெயரையேனுஞ் சொல்லத் தகாது. "என்று கிரந்த நூல்களிற் கூறப்படுவானேன்?

குரு: சகள நிஷ்களத்திற் சர்வமும் சிவமயமாயிருத்தலினால் கிருத்திய நிமித்தந் தோன்றிய விஷ்ணுவுஞ் சிவத்திற் கன்னியமாகார். அப்படி அன்னியபாவனை கொள்வது சிவத்துரோக மாகுமென்றும், அத்துரோகம் எத்தேவரையும் பற்றக் கூடியாதா யிருத்தலினால் அது நரகத்துக் காளாக்குமென்றும், அதனால் ஒரு போதும் உண்மைப் பொருளாகிய சிவத்தைப் பேதித்து அரிய வி ஷ்ணுவின் பெயரையேனுஞ் சொல்லத்தகாது, அது குற்றமா மென்றுங் கூரியதாகும். இதில், உண்மையி லுண்மையாக வைத்து எத்தேவரை யேத்தினும் போற்றினும் பிழைபடா வென்றும், அவ்வுண்மையை யிகழ்ந்து நிற்றல் அங்ஙனம் பிழைபடு மென்றும் அறியலாமன்றோ. இன்னமும் அவ்வுண்மை யெப்படியேல், சிவமே வானமும் விஷ்ணுவே புவனுமுமாம். இதினாலேயே விஷ்ணுவுக்குப் " பிருதிவி பதி " என்ற நாமம் ஏற்பட்டிருக்கிறதாக வேதத்திலும் விளம்பலுற்றது. காண்க!



சிஷி: நன்று, மூவருக்கும் மற்றியாவருக்கும் முதல்வனெனுஞ் சிவனானவர் தன்னைப்போற் பாரதி கொழுநற்கும் ஐந்து சிரமிருக்கப் பார்த்துப் பொறாமை கொண்டு ஓர் சிரசைக் கிள்ளியதெதுபற்றி?

குரு: சிருஷ்டிகர்த்தா நம்மைத் தவிர வேறொரு வருண்டோவென்று மமதை கொண்ட கமலயோனியினகங் காரத்தை மாற்றி யதார்த்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டு பையிரவமூர்த்தமாய் நின்று பரமசிவத்தை யவமதித்த நடுசிரசைக் கிள்ளி அச்சிரசையு மோரடையாளமாய்த் தன்வயப்படுத்தியும், அப்பிரமன் மமதைக்குக் காரணமாயிருந்த அசுத்த ரக்தத்தையும் வெளிப்படுத்திக் கபாலத்திலேந்தினார் ஷாட்குண்யனாகிய சகளச்சிவன். அன்று முதலயனுக் கைந்து முகமின்றி நான்குமுகங்காளாயினவென்று நூனுவலும் இவ்விடயம் புநீதமின்றிப் பொறாமையன்று.

சிஷி: அன்னணஞ் சிரங்கொய்த தேவனைப் பிரமன் கோபித்ததாகவும் அப்போது பிரமதேவனுடைய பிரமஹத்தி பூமியின் கடையாந்தரம்வரை துரத்தித் தொடர்ந்து பன்னிரண்டாண்டு பீடித் தலைத்த தாகவும், அக்கபாலிக்குத் தான் பிதாவுங் குருவுமாக வுள்ளவனென்று பிரமன் பேசியதாகவும் புராணத்திற் பொறித்திருப்ப தென்ன?

குரு: அந்தப்படி சிரந் துண்டுபட்டவுடனே அகங்கரிப்பின்றி பிரமாவும் அவர் சிரமுந் துன்புற்றுத் தன்னை நாடி வருந்துந் துயரொழிக்கும் பொருட்டும் பரமசிவ கட்டளையை நிறைவேற்றும் பொருட்டும் அத்தேவன் பரமசிவ தியானம் புரிந்து உலகெங்கு நடமாடியதையே சல ரவ்வாறுரைக்கத் துணிந்தார். புராண தாற்பரியம் மாறுபடுமாயின் நாலு மறை கட்கு முன்னம் பரமனருளிய ஆகமங்க ளுண்மைகூறப் பிரமாணமாயிருக் கின்றன. நிற்க; மேனொடித்த அயன் ஈஸ்வர பிரதிபிம்ப னாகலால் அத்தேவ னாகிய கபாலியும் யாவற்றிற்கு மாதியான பரமசிவத்தைத் தியானிக்கலானார். அயன் சிருஷ்டிதேவனும் வேதனுமாதலால் அக்கபாலியாகிய பையிரவர்க்கு அவர் பிதாவுங் குருவுமாமெனப் பேசியது பொது நியாயம் பற்றியே. பையிரவர் கொய்த சிரமாகிய பிரமகாபாலம் பையிரவர் கையிலிருப்பதால் அவருக்குக் (கபாலி) காபாலியென்றும் பெயர் வரலாயிற்று.

சிஷி: அந்தப் பையிரவர்க்கு யாதா மொருவர் தீண்டினாலும் தோஷ மென்கிற துர்ப்பிஷ்ட மிருகமாகிய நாயானது வாகனமா யேற்படுவானேன்?

குரு: அம் மிருகத்தினுடைய புசிப்பு அனாசார மென்பது பற்றியும், குரூரகுண முடைத்தென்பது பற்றியும், அதைத் தீண்டினுந் தோஷமென்றாம். பையிரவர்க்கு ஊர்தியான கணங்கள் வேதமாகும். பின்றொடருங் குணங் குறித்து அவ்வுருவா யிற்று.

சிஷி: நன்று. இவ்வியாசத்தின் 4 -ஆவது வினாவுத்தரத்தி லுரைத்தவாறு நிஷ்கள சகள மிரண்டினுஞ் சிவனுக்குத் தனித்தனி நிலய மெவணென வருண்மின்?

குரு: 1 -ஆவது வியாசம் 17 -ஆவது வினாவுத் தரத்திற்பகர்ந்தபடி சகளத்தில் மூன்று சரீரங்களும் நிஷ்களத்திற் சமஸ்தமும் நசித்த சூனியமும் சிவனுக்கு நிலயமாகும். அச்சூனியத்திற்கு * இருவகைப் பற்றையும் ஞானாக்கினியினா லெரித்துநின்ற பரவெளியாகிய மயான மென்றும், சகலசொரூபமும் அவருக்குச் சகளமென்றும், அவையல்லாத அதீதஞான ஸ்வயம் பிரகாசமாய் அணுவுக்கணுவா யெங்கணு நிறைந் திருப்பதே நிஷ்களமயமென்றும் வேதாக மங்கள் கூறும். ( * இருவகைப் பற்றென்பது: தன்னுடைய தல்லாத புவன போகங்களைத் தானென்கிற புறப்பற்றும், தானல்லாத அந்தக்கரணங்களைத் தானென்னும் உட்பற்றுமாம்.)

சிஷி: இவ்வண்ணமாயின், விபூதி யுத்திராக்கந் தரித்த நந்திவாகன மான் மழு சதுர்ப்புஜ காளங்கண்ட திரி நேத்ர தாரியென் றெவரைச் சொல்லுவது?

குரு: 4 - ஆவது வினா வுத்தரத்தில் " சிவனுக்குச் சகளலீலை " யென்று பொதுப் பட வுரைத்ததிலேயே இவை யனைத்தும் பொருந்திய தென்றறியக் கடவாய்! சொற்ற அவ்வேடத்தையே சர்வ உருத்திரர்களுமுடையவர்களா யிருக்கிறார்கள்.

சிஷி: சாற்றுஞ் சகளச்சிவன் நிலவரமோ? அநிலவரமோ?

குரு: ஈஸ்வர சங்கற்பமெனுந் தமது சங்கற்பமுள்ளளவு மிருந்து நிஷ்களத்தி னிலைப்பர்.

சிஷி: அப்படியேல், அவருக்கது பிறப் பிறப்பாகாவோ?

குரு: சதுர் யோனியி லெதிலேனும் ஜெனிப்பதும் மரிப்பதுந்தான் பிறப்பிறப்பு. பிராகிருத்ததில் மற்ற வேடங்களெல்லாம் சித் விலாசங்களாகும். அப்படிக்கான சித்விலாச சொரூபமா யிராநின்ற சகளேஸ்வரனுருவில் வந்தவர்களும் யாதொரு சித்விலாச சொரூபத்தைக் காட்டில் அதுவும் பிறப்பிறப்பாகா. ஜீவர்கள் சிவத்தை மறந்த அகங்காரத்தா லெடுக்கும் ஜனனமே பிறப்பும் அது மரிப்பதே யிறப்புமாம். அது சிவனுக்குச் சம்பந்தமிலதென்றறி! சிவனுருவில் வித்துக்குண் மரமடங்கி யிருந்ததொவ்வ அனந்த இரகசிய சொரூபங்களுண்டு. அவற்று ளிதுகாறும் அம்சித்தவைகள்போக இன்னமும் அம்சிக்க வேண்டிய வைக ளெவ்வள வுண்டென்பதைப் பெரிய மறையாதி கலைகளு

மறிந்திலது. சிஷி: அச் சகளேஸ்வரனே கிருத்திய கர்த்தாக்களா யிருக்கின் அக்கர்த்தாக்கட்கு முதற் கர்த்தாவெனப் படுவார் யாவர் ? அவரபிதானமும் பிற்கூறும் விவரிக்க வேண்டும்?

குரு: அவரே ஐமுக முள்ள சதாசிவன். அவரையே சகள லீலையின் மஹேஸ்வர னென்றும், அப்பா லுருத்திரனென்று மெண்ணத் தக்கது. இதினால் நிகழ்த்திய மூவரையும் மூன்றொன்றாயுள மூலவுருத்திரனென்றாவது, மூலச்சிவ னென்றா வது சொல்லத்தக்கது, இவரோடு அபரசிவமாகிய நந்திகேஸ்வரரையும், சக்தி யையும், விஷ்ணுவையும், பிரமாவையுங் கூட்டப் பஞ்சகர்த்தாக்களென்றாம்.

சிஷி: ஆயின், ஆதியான சகளேஸ்வரனுக்கு மாடு வாகனமும் துவஜமுமாகவும், கரியதள் வரியதள் உடையாகவும், என்பும் பாம்பும் அக்கும் உருத்திராக்கமும் அணியாகவும், வெண்சாம்பர் பூச்சாகவும், மானும் மழுவும் சூலமும் கபாலமும் கைக்குச்சுமையாகவும், குழவிவிதுவும் புனன்மகளிரும் தலைக்குச்சுமையாகவு மிருந்தக்காற் சிவனென்பார் சிறப்புடையரோ?

குரு: கேள்! திரிபுர சம்ஹாரத்தில் சிவனடியைத் தாங்கமாட்டாமல் இரதம் நெற நெறன முறிந்திடும்போழ்து விஷ்ணு விருஷபமா யெழுந்து சிவனடியைத் தாங்கினார். அதுபற்றியும், தரும தேவதையானது சிவனுள்ளளவுந் தானழியா திருக்கவும், சிவனைப் பூஜித்து விசுவாசிக்கவும், அவர் தரிசனமென்றும் இடை விடாதிருக்கவும், அவர் திருவடிகளைச் சுமக்கற்கோர் பணிவிடைப் பொருளா யிருக்கவும், அவர் காரியத்தை அவருத்தாரப்படி தான் பிரேரிக்கவும், அவர் தன்மையை மாயையாற் பேதித்துள்ள சமயபாவனா தேவர்களைப் புகழாமல் அவரையே புகழ்ந்திருக்கவும்,பரலோக அந்தராளச் சாளரத்தை மறைத்துச் சதா வவர் பார்வையிலேயே படுத்திருக்கவுமாக வெண்ணங்கொண்டு அனேக கால நோன் பிழைத்துங் கைகூடாமல் ஓர்காற் சிவானுக்ரகத்தாற் புனித சொரூபமாகிய வெள் விருஷபமாய்ப் பரமனண்டையிற் சென்று அவர்க் கிதம் பிறக்கும் படியாகத் திருச்சரணை மெதுவாய் நக்கி நக்கிக் கொண்டு நிற்பதற் கிரங்கித் தேவர்களுந் திருப்திபட இஃது சத்திரூபமென அங்கீகரித் தாண்டுகொண்டார். இது பற்றியும் அவ்விடை வாகனமாகவுங் கொடியாகவு மமைந்ததாகும். தேவர் முனிவரைத் தொந்தரித்த கயாசுரனாகிய யானையும் அகங்காரத்தால் தாருகாவனத் திருடிக ளேவிய வேள்விப் புலியும் ஈசனை யெதிர்த்ததனால் அவைகளை வதைத்து அதளையுரித்து ஜீவர்க ளகங்காரங் கொளாமல் அடையாளமாய்த் தரித்துக் கொண்டது தொட்டு அவைகண் முறையே உசிதமுள போர்வையாகவும் உடை யாகவும், பொய்யாகிய மாயையை மெய்யாகிய மயானத்திற் சுட்டெரிப்பது தாமென்று எவரு மறிந்து பிழைக்க என்பையுஞ் சாம்பரையும் அடையாளமாகவும், எவருக்கு முதவாதவைகளுந் தமக்குதவுமென்றும் அரவவடிவான குண்டலி சக்தி தம் வசமென்றுங் காட்டவெனக் கருடனுக்குப் பயந்தொளித்த பாம்புகளுடன் சேர அவ்விருடிகளேவிய பணத்தைப் பணியாகவும், தாம் பெருமையில்லாச் சமநிலை யை யுடையேமென்றுலகுக் கறிவிக்க நவமணிக ளல்லாத அக்குமணியை அணியா கவும், தமது திரிநேத்திரங்களையும் விழித்த காலையிலுதிர்ந்த கண்ணீர் உருத்திரர்க ளணியத்தக்க வுருத்திராக்ஷமானதைத் தாமுமணிந்து காட்டியதாகவும், மேனொடித்த தாருகாவனத் திருடிகளால் வேள்வியினின்று முண்டுசெய் தேவப் பட்ட கலைமானைத் திருச்செவிகண் சிரவணஞ்செய் திருக்கும்படி யிடக்கரத்தி னும் எதிர்த்துவந்த சூலத்தையும் மழுவையும் மற்ற கரங்களினுமாக விருத்தி அச்சூலத்தைத் திரிமூர்த்திகளும் திரித்துவமும் இவ்வணமே என்றுஞ் சாக்ஷிசெய்து வேத நெறியை விட்டவர்க ளெவ்வருக்குந் தமது கரம் அக்கினியை யளிக்கத் தக்கது. அதுவே யுருத்திரர்கள் தன்மையாகுமென் றறிவிக்க வென்று மேற்படி ரிஷிக ளேவிய வேள்வித் தீயைப் பாணியின் மழுவாகவும், அந்தத் தாருகாவனத்து ரிஷிகளைப்போலக் "கர்மமே தெய்வம் " என்று மாறுபட்டவர்களையுந் தெளி விக்கப் பிக்ஷாடனவடிவந் தாங்கியதென்று காட்டக் கையிற் * கங்காள கபாலமாக வும், சர்வ ஜீவர்களை யுந் தாம் இரக்ஷிக்கும் பொருட்டு பாற்கடலிலெழுந் தெங்கும் பரவக்கூடிய விஷத்தை யுண்டுவிடவென்று விண்டுவாதி தேவர்கள் கேட்டுக் கொண்ட படிக்கும் உமாதேவியார் சம்பதப்படிக்கும் தம துத்தரப்படி கணத்தலைவரான ஆலாலசுந்தரர் திரட்டிக் கொடுவரக்கண்டு ஒரு திவலையாய் அகங்கையில் வாங்கி யுட்கொண்டு மேலுங்கீழுஞ் செல்லொட்டாது கண்டத் திருத்தியும், தம்மை சரணென்றடைந்தவர்களைப் பாதுகாப்பதென் றெவரு மறிய இள மதியை வேணியிலடையாளமாகவும், பரமனை உமையவள் கண்புதைத்த காலையில் விரல்களிற்றோன்றி ஆயிரநூறுகோடி முகங்களாய்ப் பரவிய புனலாலும் பகீரத னிமித்தம் அளவுகடந் தெழுந்த கங்கையாலும் உலகுக் கபாய முறாதிருக்கவென்று அவைகளை ஓர் துளியாகத் தங்கிடை யைக்யமாகவுஞ் செய்துகொண்ட பரமனுக்குச் சிறப்பவர் செப்பவல்லார்! சிறுமை யெவர் செப்பவல்லார்! நீயே சொல்லுக! ( * கங்காள கபாலமென்பது முழுவென்பாகிய தலைமண்டை )

சிஷி: இன்னமும், சிவனானவர் : பரசு கட்கம் வஜ்ரம் அங்குசம் என்னு மாயுதங்களையும், * பாசத்தையும் ** கண்டையையும் கரங்களிற் றரித்திருக் கின்ற தாகத் தெரிகின்றனவே : அவைகள் யாது காரணம் பற்றி?

குரு: கேள், மேற்கோள். " உருவருள் குணங்க ளோடு முணர்வரு ளுருவிற் றோன்றுங் கருமமு மருள ரன்றன் கரசர ணாதி சாங்கந் தருமரு ளுபாங்க மெல்லாந் தானறு டனக் கொன் றின்றி யருளுறு வுயிருக் கென்றே யாக்கினன் சிந்த னன்றே. " என்றபடி சிவனுடைய உபாங்க சாங்க அங்கங்களெல்லாம் ஜீவர்கட் கருளு ண்டாகி நன்மை பயக்கும் பொருட்டேயுள தெனத்தெளிக! பரசு சத்தியத்தையும், கட்கம் பிரதாபத்தையும், கண்டை சத்தநாத த்தையு முணர்த்துவதுபோல பிறவற் றையு மெண்ணுவதோடு நாகம் - இருத்தியாதி சுத்தமாயையுங் குறிப்பதனைய *** பதி பசு பாசமென்னு மூன்றனு ளொன்றாகிய பாசமானது : அனாரதம் அளவிறந்த வலிமை யுளதும் செம்பிற் களிம்புபோல ஜீவனைப்பற்றி ஆத்ம சொரூபமாகிய அறிவைப் பந்தித்து ஆவரணிப்பதும், சிவ புண்ணியமாகிய கருமம் பக்தி உபாஸனை யோகம் ஞானம் என்னும் அதிகார வகைகளின் மேலீட்டாற் பக்குவப்படுவதும், எல்லினிருளிலும் அதியிருளா யிருக்கின்ற துமான அஞ்ஞான மாயையாகிய அதோ மாயையையும் உணர்த்துவதன்றி அபயகரம் அனுக்ரகத்தையுமுணர்த்து மென்க. இருளிலும் அதிவலி யென்றது: எல்லிருள் தன்னைக் காட்டிக்கொண்டு பிரபஞ்சத்தை ஆவரணிக்கும். ஆணவ விருளானது - தன்னையும் பதியையும் அபவாரணிக்கும் அதனா லென்க. ( அபவாரணம் - மறைப்பு ) ( *பாசமென்பது - கயிறு **கண்டையென்பது - மணி *** பதி பசுவனிலக்கணங் கள்; 25 - ஆவது வியாசம் 21 -ஆவது வினாவுத் தரத்தில் செவ்வென வெளியாம்.)

சிஷி: பரமனார் கையில் தமருகத்தையும் சிரசில் நகுவெண்டலையையும் தரித்திருக்கவும், ஆமையோடு பன்றிக்கொம்பு மீன்கண் இவைகளைத் தலைமாலையோட ணிந்திருக்கவு முண்டாய காரண மென்னை?

குரு: மேற்றுலக்கிய தாருகாவனத் திருடிகள் அதர்வண வேத மந்திரங்கள் யேவினார்கள். அவைகளொருங்கே தமருக ரூபங்கொண்டு வருவதைத் தெரிந்து இது தமது சத்திநாதத்தை யுணர்த்தற் கோரடையாளமாமென்று தமது திருப்பா ணியிலே தரித்துக் கொண்டார். தம்மை மோஹித்துப் பின்றொடர்ந்த தன்மை யால் 48,000 முனிவர்க்களைப் பெற்றப் பெண்களுக்கு நாயகர்களான மேற்படி தாருகாவனத் திருடிகள் " சிவனைத் தின்றுவரக்கடவாய் " என்று ஏவிய நகுவெண்டலையையும் அடையாளமாகச் ஜடாமகுடத்திற் றரித்தார். க்ஷீராப்தியை கடையும்போது மந்திரகிரியாகி மத்துக் கடலிலமிழ்வதைக் கண்ட தேவர்கள் விஷ்ணுவைத் தியானித்தார்கள். அவர் ஆமையாகி மத்தை முதுகி னிற்கும்படி தாங்கியபின் சரீர விகற்பத்தான் மமதை மேலிட்டுக் கடலைக் கலக்குகையில் கைலாய பதிக்கு விண்ணப்பித்த தேவாதிகட் கிரங்கி அச்சிவபிரான் விநாயக மூர்த்தியை யனுப்பினார். அவர் தமது துதிக்கையாற் கடனீரனைத்து முள்ளேறச் செய்கையில் அவ் வுன்மத்த ஆமையு முள்ளே சென்றது. பின்னர் வினாயகர் புழையினின்று நீரைச் சிந்தியவுடனே பலங்குன்றி மதிமயங்கி வீழ்ந்த ஆமையின் ஓட்டினைத் தமது கோட்டினாற் பெயர்த்துக் கொடுவந்து கடவுட்குக் காணிக்கையா யளித்ததையும் அடையாளமாய்த் தரிக்கவெனத் தேவாதிகள் வேண்டுதலையும் பரமனா ரோர்ந்து மார்பில் தரித்துக் கொண்டார். பூமியைக் கவர்ந்துகொண்டுபோன ஹிரண்யாக்ஷனைச் சங்கரித்த விஷ்ணு வவதாரமாகிய பன்றி உன்மத்தங் கொண்டு உலகங்களை நிலை பெயரச் செய்ய வாரம்பிக்கையில் தேவர்கள் செய்த மனுவுக்காகத் திருவுள மிரங்கி வேலாயுதக் கடவுளை யனுப்பினார். அவர் தமது வேலாயுதத்தை அவ்வராகத்தின் றலையீற் குத்தி யமுக்கிக் கூரிய கொம்புகளைப் பெயர்த்தெடுத்து வந்து ஈஸ்வரனிடம் வைத்தபோது அதைய்யும் முன்னமனைய வடையாளமாக மார்பிற் றரித்துக் கொண்டார். வேதங்களைத் திருடிச் சென்ற அசுரனைக் கொன்று இரக்தபானஞ் செய்து மஸ்தேறிய விஷ்ணு வவதாரமாகிய மீன் - உலகம் வருந்தும்படி கடலைக்கலக்கி யதைக் தீர்க்கவென்று பிரார்த்தித்த அண்டர்கள் துதி கண்ட சிவபெருமான் அருள்சுரந்து ஓர் பையிரவரை யனுப்பினார். அவர் அம்மீனை வலைவீசிப் பிடித்து அதன் கண்களைப் பெயர்த்துச் சிவ சன்னிதானத்தில் வைத்தகாலை தேவர்கள் வேண்டற்படி அஃதையு மடையாளமாக மார்பிற் றரித்து கொண்டார்.

சிஷி: இந்த வியாசத்தின் 17 - ஆவது வினாவுத்தரத்துட் சொன்ன பிரகாரமாகச் சிவபிரா னுரித்த யானையின் வர்த்தமானத்தையும் அவண் கூறிய மெய்யாகிய மயானச் சுடலைக்கண் தரித்த என்புகளைப் பிரம விஷ்ணுக்களின் என்புக ளென்றும் சிவனணிந்த உபவீதம் கேசமென்றும் புராணங்க ளதிர்ப்பதையுஞ் சற்றே துலக்கி இம்ப ரருளவேண்டும் !

குரு: பூருவத்திலுள்ள கயாசுர னென்னும் ஓரவுணன் பிரமாவை நோக்கித் தவஞ் செய்து " தேவர்களை யெல்லாம் வென்று ஜெயம்பெற " வேணுமெனக் கேட்ட வரத்தையும், " பரமனிடஞ் சென்றா லழிந்துபோம் " எனப் பிரமா கொடுத்த வரத்தையும் ஏற்றுக் கொண்டு தேவர்களை வென்று முனிவர்களைத் தொடர் கையில் அவர்க ளஞ்சி நடுநடுங்கிக் காசிமாநகரஞ் சேர்ந்த போது அங்குமவன் றொடர்ந்து வந்ததைக் கண்டு மணி கர்ணிகை யென்னும் ஆலயத்துட் போய்ச் சிவனைச் சரணாகதியென் றடைந்தார்கள். கயாசுரன் தன் பராக்கிரம வலியை யெண்ணி ஆண்டெய்தி முனிவர்களைக்கண்டு கொல்லவேண்டுமென் றுறுமுகையில் பரமேஸ்வரன் உக்ரமூர்த்தியாய்த் தோன்றி யானையாய் நிற்குங் கயாசுரனுடைய மத்தகத்தின் மிதித்துக் குப்புற வீழ்த்திப் பிடரியைக் கிழித்துத் தோலையுரித்துத் தாருகாவனத்து ரிஷிகள் போடப்பட்ட சாபங்களால் ஒரு தீங்கு மணுகாத் தன்மை வாய்ந்தவரும் விஷ்ணு வவதாரமாகிய சிம்மத்தைக் கொன்றுரித்த சர்மத்தை உத்தரீயமாய்த் தரித்துக் கொண்ட வருமான சிவபெரு மான் திருமேனியிற் போர்த்துக் கொண்டனர். சர்வ சங்கார காலங்கடோறும் மாயா தோற்றங்களாகிய பிர்ம விஷ்ணுக் களின் சரீரங்களை யொழித்து நிற்கக்கூடிய வவதரம் அச்சரீரங்களையுந் தமது ஞானச் சுடலையின் கண்ணே சுட்டெரித்து மீந்த வென்புகளையும் மாலைகளாக வணிந்தருளினார். அவர் சிரங்களைச் சிரமாலையாக வணிந்தார். கேசங்களை உபவீதமாக வணிந்தார். இவைக ளெல்லாம் அடியார்களாகிய அவர்களுடைய சரீரம் வீண்போகக் கூடாதென்றும், நன்மை யுண்டாகவென்றும் அங்கீகரித்த காருண்யமே யொழிய வேறன்று. இந்நிகமங் கொண்டே நம்மவர்களும் மாய்ந்த களேபரங்களைச் சுடலைக்காக்குகின்றன ரன்றோ. இதில் ஸ்தூலார்த்தமும் சூட்சுமார்த்தமும் பொருந்துகின்றனவுங் காண்க !

சிஷி: இத்தகைய சகளேஸ்வரன் முப்புர சம்மாரத்திற் கணபதியைப் பூஜித்ததா யிருக்கின்ற தெக்காரணங் கொடு?

குரு: சர்வ சங்கற்பங்கட்கும் முன்னோனாகிய விநாயகரை முன்னிட்டுக் கொள்வதென்ற சிவனுடைய வரம் ஏற்பட்டபடிக்கு ஆங்கது நியாயமாயிற்று. அதினின்றுந் திரிபுரத்தைச் சிவன் செயலால் நகைத் தெரித்த திஞ்ஞால மறியாத தல்லவே நீ! துரருத்தம் பண்ணற்கு.

சிஷி: சிவனுடைய சகள கோலாகலங்க ளெல்லாந் தாங்கள் சாற்று மருத்தப் படிக் கானதா யிருக்கின் சத்துருக்களை நேராமலே தடுக்கவும், உலகத்திற்குத் தாம் உண்மையானவரென்று அவரவர் ஹிருதயத்திலேயே காட்டவுஞ் சக்தி யற்றவ ரிலரன்றோ?

குரு: உருவப்பட்ட ஜீவர்களுடைய ஆவரணஹிருதயம் உண்மை ஞானத்தைப் பொருந்தும் வரையில் எவ்விதத்தானும் பிரகாசிக்கத் தக்கதல்ல. அப்படிக்கான அக்ஞானத்தா னினைக்குஞ் செயல்கள் பல கோடியா யிருந்துகொண்டிருக்கும். அவைகளை யனுபவிக்க அவர்களே கன்ம வசத்தரா யிருத்தலினாலும் நிரவய வமா யிராநின்ற பிரமம் - ஜீவர்கணிமித்தம் ரூபாரூப ரூபங்களானது தொட்டு காக்ஷியிற் பிரமாணப் படுத்தி அறிவிலார் நினைக்க ஹேது வானதினாலும் அந்தச் சிவன் அவ்வணங் காட்ட வேண்டிய தவசிய மின்றே.

சிஷி: நன்று, சிவன் பஸ்மாசுரனுக்கு வரங்கொடுத்த காலை, அவ்வரத்தைப் பரீட்சிப்பதாக அவ்வசுரன் தன்கையைச் சிவன் சென்னியில் வைக்க வெத்தனப் படுகையில் அவர் பீதிகொண்டு ஐவேலிக் கொட்டைக்கு ளொளித்த தென்னை?

குரு: அவ்வசுரன் கொடிய தவஞ்செய்து " எவன்றலையி லென்கரம் வைக்கப் படுமோ அவன் றலை சாம்பராகுக " என்ற துஷ்ட வரத்தை அவன் கோருதற்படி வரவள்ளல் இனி நடக்குங் காரியமின்ன தென் றுள்ளிக் கொடுத்தபின், அவன் துணிவு கண்ட நிமிடம் தமது வரத்தைத் தாமே யழித்தல் தகுதியன் றெனவும் நாம் மறைய இவன் றேட விஷ்ணு வருக இவன் தொலைவானெனவுஞ் சிந்தித்து அங்ஙன முள்ள ஐவேலிச் செடிக்குண் மறைவதாய்ப் போக்குக் காட்டிய வவதரம் அவன் றொடர்ந்து அச்செடியை வகிர்ந்து வகிர்ந்து தேடுவதில் விடா முயற்சியாயிருந்தான். அஞ்ஞான்று ஹரியானவர் மாலெனும் பேர் மகிமைப்பட ஜகன் மோகினியாய்த் தோன்றி அவனைத் தன் பேரின் மோஹிக்கச் செய்து நதியின் மூழ்கித் தவவேடம் நீக்கி வா வென்றிசைத்த வண்ணம் மாயமா யுண்டாக்கிய நதியின் மூழ்கித் தன்றலையைத் தேய்த்துக் கழுவும் போழ்து நவசத்திகளிலொரு தோற்றமாகிய திருமாலைத் திரோப வானுக்ரகத்தாற் கலந்து பிரமனைப் பெற்ற பிதாவாகிய பரமசிவனுடைய வரமே அவனைப் பஸபமாக்கி அவனுக்குப் பஸ்மாசுரனென்னும் பெயரும் வழங்கும்படி செய்தது. இதினால் வரோதயனாகி யெங்கு நிறைந்த விறைவற்கு நீ சிறுமை செப்பத் துணிவ தென்னை?

சிஷி: ஸ்திரிகளின் வனப்பில் திலமத்தனை திலமத்தனை யெடுத்துப் பிரமன் படைக்கத் தோன்றிய திலோத்தமை யென்பவளின் அழகைச் சிவனானவர்; தமது ஒரு முகத்தாற் பார்த்து மாளாது நான்கு புறத்தும் நான்கு முகங்களை யுண்டுசெய்து கொண்டனர் என்பதாய்ப் புராணத்தில் வெளியாகின்றதே; அது கடவுட்கு நன்மார்க்க மாமா?

குரு: துஷ்டராகிய சுந்தோபசுந்தா ளென்னுந் தமையன் றம்பிக ளிருவரையும் நாசஞ் செய்யவென்று பிரமாதி தேவர்கள் திலோத்தமை யென்பவளை மன்மதனைப் போற்றேற்றி " நீ, உருத்திரமூர்த்தியினிடத்தில் வாக்குப் பெற்றுக் கொண்டு செல்", எனத்திட்டஞ் செய்தனுப்பிய பிரகாரம் உருத்திர மூர்த்தியை வணங்கிப் பிரதக்ஷண நமஸ்காரம் புரிகையில் அவள் வணக்கம் மிகவும் அழகா யிருந்தமையால் அவ்வாறு நான்கு வதனங்களையுந் தோன்றச் செய்துகொண்டு கண்ணுற்று " உன்னெண்ணப்படி யாகுக " என்று வாக்களித்தார். அஃது காமக் கருத்தை காட்டுவதன்று.

சிஷி: பிருகு முனி பத்தினி நாகவல்லியென்பவள் அழகின் மிக்கவளாக யிருக்கி றாளெனக் கருதி சிவனானவர் மால் பிரமனுடன் சென்று மாறுவேடங் கொண்டு நிருவாண பிக்ஷை கேட்டகாலையில் அவள் மூவரையுங் குழந்தை களாக்கிப் பாலூட்டிக் கோபித்ததாய் வெளியாகின்றதே, அதனாற் சிவன் எத்தன்மையுளா ரென் றெண்ணலாம்?

குரு: அவள், கற்பெனு மிலக்கணத்தில் மிக்க வளாயிருக்கிறாளென் றின்புற்று அன்னணம் மூவருஞ் சென்று அவளின் பதிவிரதா தன்மத்தையே வெளிப் படுத்தி னதாகும். அங்ஙன மவள் தங்களை மதியாமற் கோபித்தது குற்றமென்று " நீ யழகின்றி மாறுவடி வாகக் கடவாய் " என்று சபித்தபடி உலகில் ஆதியென்னுந் தாய்க்கும் பகவனென்னுந் தந்தைக்கும் ஊற்றுக்காட்டிற் பிறந்து மாரியம்மையா யிருக்கிறாள் - இவ்விடயத்தில் அணுமான மேனுந் தோடமின்று.

சிஷி: ஈதிப்படிக்காயினும், தெருவிலே மதுரமான பாடல்களைப் பாடித் தாருகாவ னத் திருடிகளின் பத்தினிகளைச் சிவன் கற்பழித்தார் என்னலும் பொய்யாமோ?

குரு: அவ்விருடிகள் பிரமனை நோக்கித் தபஞ் செய்து சில வரங்களைப் பெற்ற பின்னர் " கடவுளன்றிக் கர்மங்களே தெய்வம் " என்னும் மீமாம்சா மதம்பற்றி பலமாய் நின்றதை மாற்றி அவர்கட்கு யதார்த்தத்தைத் தெரிவிக்கும் பொருட்டும் அவர்கள் தமதடியார்களாகி சிலாக்கியமாம் பொருட்டுமாக; " அவர்களிடம் மோஹினியாய்ச் சென்று அவர்களைக் காமக் கனலால் அறிவழியும்படி செய் " என்று உலகளந்தோனையனுப்பி தாம் அழகிய பிக்ஷாடனபடிவங் தாங்கி அவர்களது பத்தினிகளிடஞ் சென்றகாலை, அம்மாதர்கள் தங்களைக்கூடி மருவ வென்று பின்றொடர்ந்து கற்புநிலை குலைந்து கைவளைகளையும் உடைகளை யும் நழுவவிட்டு " இவ்வளைகளை யெங்கள் கைகளிலிடுமே" என்றவுடனே " இப்போழ்துகூடா இனிமேற் கூடும். " என்று அவ் வளைகளைப் பொறுக்கிக் கொண்டு மறைந்தனர். அவர்கணிலை குலைந்தனர். அவ்விருஷி பத்தினிகளி னிச்சையைத் தமது அற்புத விலாச மாயா கோலாகலலீலா வினோதத்தாற் றீர்த்து மருளினார். பின்னர் அதை அவ்விருடி களறிந்து " நீங்கள் வைசிய ஸ்திரீகளாய்ப் பிறக்கக் கடவீர்கள் " என்று சபித்து நன்மார்க்கந் தெரிந்து கடவுளை நிதானித்து ய்ந்தார்கள். இதனால் ஒருபாத்தியாயனானவன் துஷ்டர்களாயிருந்த பள்ளிப் பிள்ளைகளை, நன்றாய்க் கண்டித்து வித்தை வருத்தியது போன்று அவர்களைப் பெருமைப்படுத்த வந்ததே யொழியச் சிறுமைப் படுத்தவாவது காமக் கருத்தோ டேயாவது வந்த தன்று.

சிஷி: பாலசந்திரனையும் மந்தாகினியையும் ( மந்தாகினி - கங்கை ) வேறு தானங்களிற் பொருந்தாது, விசேஷமான மூர்த்தினியிற் பொருந்திய சிவன் கருத்து யாதோ?

குரு: அஃதாவது : நோற்ற நோன்பி னிமித்தம் அவர்களென்றும் விளங்கிடும் ஆகாயத்தி னிடமாயிருக்கும்படியாகத் தமது சென்னியாகிய பெரிய விண்ணிடை பொருத்தியதும், அக்கினிக் கண்ணினனலைச் சமஞ்செய்திருக்க வெனவுமே கட்டளையிட்ட கருத்தாம்.

சிஷி: மார்க்க சீர்ஷ ஆர்த்திரை யென்கிற மார்கழித் திருவாதிரையில் சிவன் பிறந்தார் எனப்பகர்வதால், சிவன் பிறப்பிறப்பற்ற கடவுளென்ப தெவ்விதம்?

குரு: அப்படிப் பிறந்ததெனல், ஓருருத்திர தோற்றமே யொழிய வேறல்ல.

சிஷி: அற்றேல், சிவன் மூங்கிலினிடத்தும், ஞண்டுக் குழியினிடத்தும் பிறந்தா ரென்ப தென்னை?

குரு: தொண்டைநாட்டிலுள்ள சிவஸ்தலங்கண் முப்பத்தி ரண்டில் திருப்பாசூரெ ன்னுந் தலத்தில் ஓர் மூங்கி லடியினும், மேற்படி நாட்டில் திருமாகற லென்னுந் தலத்தில் ஓர் ஞண்டுவளையினுங் காரணம் பற்றி மூர்த்திகரமாய் முளைத் தெழு ந்ததையே, அவ்வாறு சிவன் பிறந்தாரென் றதிர்ப்பதுள. அஃது பிறப்பன்றே.

சிஷி: அந்தச் சிவன் முதலவனாயின், தமது பிள்ளயாகிய பாலசுப்ரமணியரிடம் கைகட்டி வாய் பொத்தித் தாமொரு சிஷ்யனாகவும், அவரொரு குருவாகவு மிருந்து; அக்குமரகுருவிடம் பிரணவத்துக்குப் பொருள் கேட்பானேன்?

குரு: அவ்விருத்தாந்தம் ஈண்டிசைத்தல் கூடா. 31 - ஆவது வியாசத்திற் றெளிவாய் வெளியிடுவோம்.

சிஷி: சரி. கஜேந்திரனென்னும் ஓர் யானை முதலையாற் பீடிக்கப்பட்டு " ஆதிமூலம் " என்று கூப்பிட்ட காலையில், ஹரியானவர் உதவியது போல உதவாதிருந்த சிவனை ஆதிமூலமாகக் கொள்ள நியாயமும் வருமா?

குரு: அப்படிக் கூப்பிட்ட சமயம் இரக்ஷக கர்த்தாவாக நேமிக்கப்பட்ட திருமா லானவர் காவாதே விடின் அவர் - கர்த்தராகிய சிவபெருமான் தனக்கிட்ட கட்டளையை ஆலசியஞ் செய்தவரே யாவார். அன்றியும் அந்நேரம் அம்மாதவ னுதவா விடிற்றாமே யுதவுவார். நிற்க, முதலில் விஷ்ணு பிரமாக்களைச் சிஷ்டிக்கும் பிதாவும் முடிவில் அவர்களை மாய்த்துத் தமது சூலத்திலேந்தி நுதலம்பகத்தா லெரித்துண்டாகும் பராகத்தைத் திருமேனிக்கண் அணியும் சங்காரகிருத்தியத்தை வகித்த தேவும் அவரால் விளங்கத் தகுவாரேல், ஆதிமூல மவரன்றி வேறு முண்டோ? அறிதி!

சிஷி: முயலக னென்னும் ஓரரக்கனை அப்பரம சிவனானவர் என்றும் மிதித்துக் கொண்டு நிருத்தம் புரிவதாய்க்காணும் நியாயமென்னை?

குரு: முன்னம் பன்னிய தாருகாவனத் திருடிகள் வேள்வியிலுண்டு பண்ணிப் பரமபிதா பேரிலேவிய முயலகனைப் பிடித்து அவர் காலின்கீழே போட்டு மிதித்துத் தம்மை யெதிர்க்கும் அறிவில ரெவரும் அபஜயப் படுவாரெனச் சாக்ஷிப்படுத்தி நிர்த்தனம் புரிந்தனர். அந்நிர்த்தன மெப்படிப்பட்ட தென்னில், முன்னொரு காலத்தில் " நுமது சன்னிதானம் எனது அருள் " என்ற பராசத்தி க்குத் தமதருள் வலியைக் காண்பிக்க வென்று சத்தியை விட்டுப் பிரிந்தபோது அச்சத்தியுஞ் செயலற்று சர்வ ஜீவகோடிகளும் பிரேதமாய்ப் போனபின் அவள் தியங்கி 'அருள் செய்க ' என்று வேண்டிய காலை முதலிற் றமதருள் வடிவான உருத்திர கோடிகளையும், பின்னனர் ஏனைய ஜீவ கோடிகளையும் எழுப்பிக் கலந்து நடித்த தன்மையாகும். இன்னமும்; உண்ணு முணவாவது ஸ்தூல தேகாதி யந்தமும் பிரவேசித்து இரக்த தாதுவைப்பலப்படுத்தி ஓட நடக்க இருக்க படுக்கப் பண்ணுமாறாய் சர்வ ஜீவாத்மாக்களின் தேகங்க டோறுங்கலந்து உயிரை யெல்லாம் ஆட்டுவித்து பஞ்சகிருத்தியங்களையும் அவ்வக் கர்த்தாக்களை யதிஷ்டித்து நின்று நடாத்துந் திருக்கூத்தாகிய நட்டுவத்தன்மையுமாம். இதுதான் " அவனசையாம லணுவசையா" தென்பதும், அணுவென்றால், பரப்பிரம்ம சிவ சாயை யென்றும், உயிரென்றும் ஞானார்த்தமாகும்.

சிஷி: ஏகாதச வுருத்திரர்களுடைய நாமங்கள் எல்லாம் சிவனுக்குச் சம்பவித்த மூல மென்னை?

குரு: அவர்களுடைய நாமங்கள் அவருக்குச் சம்பவித்ததில்லை. அவருடைய திருவருட் டிருநாமங்கயையே பன்னொரு வுருத்திரருந் தரித்தனர்.

சிஷி: ஆயின், சிவனுக் குண்டான ஆகு நாமங்கள் பலவுள், ஹரன், ஆலமர் கடவுள், ஈசானன், எண்டோளன், ஐமுகன், கரியன், சங்கரன், ஜடைமுடியோன், சம்பு, தாணு, நக்கன், பாண்டரங்கன், பிஞ்சகன், பித்தன், பூதநாதன், பேயோடாடி, யோகி, வாமதேவன், நம்பன், நீலலோகிதன், வீமதேவன் என்ற நாமங்கள் பல விபரீதாரத்தங்களைத் தருகின்றனவாய்த் தெரிகிறது. ஆதலால், அவைகளின் பொருள்களைக் கிருபை கூர்ந் தெளியேற் கியம்பவேண்டும்!

குரு: ஹரன் என்பது : நாசஞ் செய்கிறவர்; அதாவது பாவங்களை நசிக்கிறவர், எப்பொருட்கு மிறைவரென்றாம். ஆலமர்கடவுள் என்பது: பிரம புத்திரர்களான ஜனகர் ஜனந்தனர் ஜனாதனர் ஜனற்குமாரர் என்னு முனிவர்களுக்காக்கக் கல்லா லின் கீழ் தக்ஷணாமூர்த்தமா யெழுத்தருளி மறைகளுக் கெட்டாததாய் எப்பொ ருளுமாய் அப்பொருள் களல்லாதது மாயிருந்த வுண்மையை அது நிர்ச்சலனமா யிருந்த தொப்பத் தாமு மசைவற விருந்து வாக்கினாற் சொல்லாமல் சின்முத் திரை பிடித்துக் காட்டிக் குறிப்பா லறி வித்தவரென்றாம். ஈசானன் என்பது : ஸ்படிக நிறத்தோடு மேனோக்கு வீக்ஷண்யத்துடன் உள்ள ஈசானமும், பொன் னிறத்தோடு கிழக்கு நோக்காயுள்ள தத்புருஷமும், நீல நிறத்தோடு தெற்கு நோக்காயுள்ள அகோரமும், பொன்னிறத்தோடு வடக்கு நோக்காயுள்ள வாமமும், வெண்ணிறத்தோடு மேற்கு நோக்காயுள்ள சத்தியோஜாதமு மென்ற ஐந்து வதனங்களும் வெளிப்படையாயுள்ள சிவமூர்த்தத்தில், அனைத்தும் ஆளுகிற ஈசான முகத்தோர் என்றாம். எண்டோளன் என்பது: ஒரு மூர்த்தத்தில் எட்டுப் புஜங்களுளரெனவும், ஐமுகன் என்பது: மேற்றுலக்கிய ஐந்து வக்திரங்க ளுளரெனவும், கரியன் என்பது: அனைத்திற்குஞ் சாக்ஷியா யிருக்கிறவரெனவும் பொருள்படும். சங்கரன் என்பது: சங்காரகர்த்தாவென்றும், குலமிலாரென்றும், முடிந்த விஷ்ணுக்களின் பாஞ்சசன்னியமாகிய சங்குகளைத் தரித்தவ ரென்றும் கூறுவர் கூற்றாயும் வரும். இப்பொருள்களன்றி, சம் - சுகம், கரன் - செய்கிறவர், அதாவது சுகத்தைச் செய்கிறவர் எனச் சமஸ்கிருத தாற்பரியப்படி பொருள் கொள்வதே தக்கது. ஜடைமுடியோன் என்பது: தமது திரோபவமாயையால் ஜீவர்களுடைய தபசுகள் கெடா தியங்கற்கென்று தபக்கோல முடையாரென் றும், சம்பு என்பது: ஆத்மாக்களின் தரந்தெரிந்து உரிய சுகங் கொடுக்கிறவர், உயிர்த்தொகைகட்கெல்லாம் பிதாவென்றுமாம். தாணு என்பது: விண்டு விரிஞ்சனெனும் இருவரும் மாயையின் வசப்பட்டுப் " பரத்துவ நிச்சயம் " தெரியாமல் நான் நான் என்று அகங்கரித்துப் பொருதுங்கால் இருவருடைய நடுவில் அடி முடி ரகிதமாய்த் தோன்ற வென்றும், அக்காலத் தவ்விருவரும் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து பூஜிக்கும் புண்ணியத்தால் தங்கள் பதிகளை மீட்டும் பெற்றுக்கொள்ள வென்றும், அவர்கள் தரிசித்த அன்றிரவு மாசித் திங்கள் அமர பக்கத்துச் சதுர்த்தசியாகிய மஹா சிவராத்திரியில் சுயம்பிரகாச சொரூபமாகிய வன்னிமலையி லிங்கமாய் வெளிப்பட்டா ரெனவும், சஞ்சல மின்றி ஸ்திரமாயுள்ளவரெனவும் பொருளாம். நக்கன் என்பது: நிருவாணமாகிய மோக்கமுடையாரெனவும், பையிரவ மூர்த்தமா யானவரெனவும், பாண்டரங்கன் என்பது: பாண்டரங்கமெனுந் திருக்கூத் துடையாரெனவும், பிஞ்சகன் என்பது: பிரம்ம விஷ்ணுக்களுடைய தலைகளை யாபரணமாக வுடையார், சங்காரகர்த்தா வெனவும், பித்தன் என்பது: அக்கினி சொரூபர், ஞானலகிரியுள ஞானாநந்த ரெனவும் பொருள்படும். பூதநாதன் என்பது: தாருகாவனத் திருடிகளேவிய பூதங்களைத் தமக்குப் படைகளாக்கிக் கொண்ட கொடிய கணங்கட்கும் தமது சொந்தப் பூதகணங்களாகிய ஞான தத்துவங்கட்கும் நாதரெனவும், சர்வபூத பௌதிகங்கட்கும் நாதரெனவும் விசேடப் பொருள் பெறப்படும். பேயோடாடி என்பது: ஞானச் சுடலைப் பராகாசத்தின்கண்ணே வசிக்கும் மேற்படி ஞானதத் துவங்களாகிய பேயாங் கணங்களோ டாடிய ஆன்ம நாயகரெனவும், யோகி என்பது: ஆலமர் கடவுள் எனும் நாமார்த்தத்தில் வெளியான ஜனகாதிகணால் வரும் மஹாதேவனிடந் தெளிந்துகொண்ட வேதநிச்சயப்படி ஞானபாதத்தை யெய்த மனமடங்கா துழலுங்கால், உமையவளைப் பருப்பத மன்னனுக்குப் புத்திரியா யனுப்பிவிட்டுத் தனித்திருந்த பரமனார் அசரீரியா யுரைத்தவாறு கயிலைக்குத் தென்பாலுள்ள ஆலின் கீழிட மகன்று வெள்ளியங்கிரி யாலயத்துட் பரமசிவனைத் தரிசித்த நிமிடம் அவர்கட்கு இரண்டா முறையாகச் சரியை கிரியை யோகம் என்ற விவரஞ் சொல்லி அனிர்வசனமான ஞான நிச்சயத்தைக் குறிப்பாற் காட்டவென்று தமது திருக்கரத்தைச் சின்மய முத்திரை பிடித்தவாறு மனமடக்கும் வகையை யோக நிஷ்டை கூடித் தெரிவித்திருந்தார்; அது பரம சிவனுக்கு அற்பகாலமாயிருந்தாலும் பிரம விஷ்ணுவாதிதேவர்கட்கனேக யுகங் களாய்க் காணப்பட்டு சிருஷ்டிகண் மல்காமல் புணர்ப்பின்றி உயிர்களிடத்தே மோனத் தன்மையு முண்டாயிற்று. இதனால், உயிர்க் குயிராய் ரூபாரூபியா யுள்ள பரமபதியை யோகியென்றியம்பத் தகுமெனவும் பொருளாம். ஆயினும், முடிவிற் * சூனியோபாதானமாய் நிற்கத் தக்கவரென்றே விசேடப் பொருள்படும். வாமதேவன் என்பது: ஈசனது ஐமுகங்களில் அழகிய வாமமென்ப தொன்றை யுள ரெனவும், நம்பன் என்பது: தலைமையிற் சிறந்தோ ரெனவும், நீலலோகிதன் என்பது: விஷத்தையும் சர்ப்பத்தையும் உடையாரெனவும், வீமதேவன் என்பது: சமஸ்த வுயிர்கட்கும் பயங்கரமாயுள்ளவர், அதாவது எல்லாந் தமக்குக் கீழ்ப் படிந்து நடக்க வுள்ளவரெனவும் அருத்தமாகும். ( * சூனியோபாதானம் = சூனியசிந்தனை )

சிஷி: இவ்வணம் பரமசிவன் மகத்துவமுள தேவனாயிருக்க, எதை யுத்தேசித்து எந்தத் தேவனை நோக்கிக் காவிகாஷாய தண்டுகமண்டல தாரியாய்ச் சன்னிய சித்துக் கொண்டார்?

குரு: இதற்கும் மேல்விளக்கிய விடையில் ஜடை முடியோனென்னும் நாமார்த் தத்தின் பொருளே யல்லாது வேறில்லை. மேலும், அவ்வேடத்திற்குரிய வானப் பிரஸ்தாச் சிரமத்திற்கு நாயகர் அவராதலால், பரிசுத்த *பஞ்சமுத்திரையென்னும் ஜடை,காஷாயம், உருத்திராக்கம், தண்டம், கமண்டலமும் விளங்க விருந்து யோகம் புரிவார்கட் கவரையன்றிப் போக்கிடம் வேறின் றெனவும் அதிஷ்டித்த முறையது வென்பதாம். ( * விபூதி, உருத்திராக்கம், காஷாயம், இலிங்கம், பஞ்சாக்ஷரம் எனுமைந்தும் பஞ்ச முத்திரை யென்றுஞ் சின்னூற்செப்பும்.)

சிஷி: பராபரனாகிய சிவன் பத்திரைகேள்வனை நோக்கி " தக்ஷன் நமக்கு அவிப்பாகங் கொடுப்பதாக வேண்டிக் கொள்வனேல், மகத்தை நீ சட்டியாதே! இலதேல், நாஸ்திசெய்து இவணெய்துக " என்றாக்ஞாபித்ததாய்க் காண்கின் றது.அவ்விதம் அவிப்பாகத்தை யாசிப்பதும் அது கிடைத்தாற் புசித்துத் திருப்தி ப்பட வெண்ணுவதும் கர்த்தத்துவ மாமோ?

குரு: அதன் பண்பு கேள். மந்திர பூர்வமாகச் செய்யும் மகத்தின் பிரயோஜன மாகிய புண்ணியத்தை அவிப்பாகமாகச் சேர்க்கப்படலாயிற்று. அப்புண்ணிய வஸ்துவை எந்தத் தேவனுக்காகவாவதீந்து அந்தப் பதவியை யடையக் கருது கிறவன் வேண்டற்படி அத்தேவ னங்கிகரித் துதவ வேண்டுமென்று வேத நியாய முள்ளபடிக்குப் பிரத்தியக்ஷம் அல்ல தப்பிரத்தியக்ஷமாக அவியை யேற்றுக் கொள்ளப்படும். அதைப் புசிப்பதென்பது; சூட்சுமம் அல்லது ஸ்தூலமாக விருந்துண்டு எக்ய கர்த்தாவை ஆசீர்வதித் தாவரணிப்பதாகும். இது பொது விதியே. பரமனை நோக்கி 10000 ஆண்டு தவமிழைத்துப் பெரிய செல்வத்தைப் பெற்ற தக்ஷப்பிரஜாபதியும் அவன் றாதையாகிய சதுர்முகனும் தங்க ணோக்கப் படி எளிவந்து ஈசனிணங்கவிலையென அகந்தை கொண்டு ஈசனுக்குப் பிரதியீச னியமிக்க வெனவும் யதார்த்த வீசனை நிஷேதஞ்செய்து விஷ்ணுவாதி தேவர் கட்கு அவிப்பாகங் கொடுப்பதாகவுந் தீர்மானித்து இறைவனாகிய ஈசனும் அவர் கணங்களும் சிவ கடாக்ஷாதிக்க முனிபுங்கவர்களுந் தவிர மற்றைய தேவர் எண்டிசைப் பாலர் முனிவர் முதலிய யாவரு மொருங்குகூடித் தேவாதி தேவனு க்கு விரோதமான மாரண ஹோமம் செய்ததை நாசஞ்செய்யவென்று சிவம் திரு வுளம் பற்றுகையில் அவர் சர்வ ஜீவான்மாக்களிடத்துந் தயையுள்ள தயாளு வாகையால் மிகவு மிரங்கி " நமது உருவாகிய நந்திதேவன் பிரமயாகத்தில் முன்னஞ் சென்று கேட்டவாறு விரோதமின்றி அவிப்பாகத்தை யளிப்பனேல், மகத்தை நீ சட்டியாதே " எனவுங் கட்டளையிட்ட காரியமா மென்றும், -- எக்கிய கர்த்தா பிரார்த்தனையான ஆரம்ப கிரியையே தீப மேற்றும் பண்டமென்றும், எக்கிய பிரேரகமே திரியென்றும், எக்கிய அவிப்பாகமே எண்ணெயென்றும், அவிப்பாகத்திற்குக் குறிப்பிட்ட தேவனே தீபத்திற்கு உபாதானச் சுடரென்றும், அவிப்பாக மேற்குஞ் சொரூப தேவனே ஏற்றிய தீபமென்றும், அவிப்பாக புண்ணிய பலனே தீபத்திற் கன்றித் தீபமேற்றியோனுக்குப் பிரயோஜனமான வெளிச்சமென்றும் உதாகரணப் பொருள் கணித்துணர்க! பரமசிவத்தின் அனுக்கிரக கயிங்கரியங்களை நடாத்தி வருகிறவர் நந்திதேவராவார்.

சிஷி: அதிர்த்தபடி தக்கனுடைய யாகத்தைக் கெடுத்துத் தேவர்களையும் அதஞ் செய்யும்படி கட்டையிட்ட சுவாமியான வருடைய உத்தரவுக்கு விரோதமாய் வீரபத்திரரை நோக்கி " விஷ்ணுபேரில் கோபிக்கவேண்டாம் கோபிக்கவேண் டாம்" என்று சொன்னதாய்க் கந்தபுராணத்திற் காணுமாறு தடுத்த தெய்வம் யாது?

குரு: சிறுவிதி மக மழிக்கவென்று உமாதேவியின் கோபாக்கினியிற் றோன்றிய பத்திரகாளியுடனும் பரமனுடைய பாலநேத்திரத்துளி தோன்றி ஆயிரம்சிரமும் இரண்டாயிரங் கரமும் பிரகாசிக்க விபூதி முதலிய ருத்ர சாதனங்களும் சூல முதலிய அஸ்திரதேவ சின்னங்களுந் தரித்துள்ள வீரப்பத்திரனாகிய சிவன், தக்ஷயக்ய நாசஞ்செய்யுங்கால் அவரொடு பன்முறை போர்தொடுத்துவந்த ஹரியானவர்; அந்தச் சிவனின் ஓங்காரிப்பால் அசைவின்றி ஸ்தம்பிக்கப்பட்டும் அளவிலா ரௌத்ராகார சீற்றத்தைக் கண்டஞ்சியும் அங்ஙனம் மிக வருந்தி பரம சிவனை நினைக்கையில் பிதாவானவருடைய கிருபாகடா க்ஷத்தாலேயே ஆகாசத்தில் அவ்வித வாக்குண்டாயிற்றென அப்புராணமே புகலும்.

சிஷி: சிவன் நாணி பிகுந்த சிந்துவாரத்தைத் தாத்திரியிலூன்றிக்கொண்டு மேனுனியிற் றலைசாய்த்துத் துஞ்சுங்கால் அந்நாணியைச் சிதலரித்துச் சிலை விசுக்கென நிமிர்ந்த நிமிடம் சிவனுடைய சென்னி பசியுண்டதை விண்டு கண்டு ஒட்டி யுயிரளித்தாரெனவும், ஓதிம முயர்த்தோனுக்கு ஒருகோடி சிவன் உயிர் மாண்ட காலம் அரை நிமிடமாகுமெனவும், சிவன்சத்தியின் வயிற்றில் விஷ்ணுவின் வேர்வையில் பிரமாவின் றொடையில் தாமதகுணத்திற் றோன்றினார் எனவும், சிவன் ஜாதியில் வைசியனாம் எனவும், ஓர் காலத்தில் விண்டுவுடன் சிவன் யுத்தஞ்செய்து அபஜய மடைந்து உயிர்வெளியாகக்கூடிய தருணத்தில் அவருக்குப் பிதாவாகிய பிரமா வந்து விண்டுவிடம் மிகமுறை யிட்டுக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டதன்மேல் சிவன் உயிர்பெற்றார் எனவும், ஓர் சமயம் மார்க்கண்டேயர் சிவனைப் பூஜிக்கக் கைலை முதலிய பதிகளிற் றேடியுங் காணாதலைந்து பின்பு மதுசூதனன் அனுமதியால் அவருடைய வாய்வழி புகுந்து உதரத்தெய்தி விண்டு விழுங்குண்ட சிவனை ஆண்டு கண்டு பூஜித்தாரெனவும், சிவன் இலிங்கமறுத்திழந்து அதைப் பெற்றுக்கொள்ளத் தபஞ்செய்தார் எனவும், நீ பிரம மல்ல உன்னை யடைந்தவர்கள் மோக்ஷம் பெறார்கள் விஷ்ணுவே பிரமம் என உரைத்துப் பிருகு ரிஷி சிவனைச் சபித்தர் எனவும் நூல்கண் முறையிடுவதை யோசித்தாற் சிவன் தன்மை யென்னவாம்?

குரு: சிலைநுனியிற் சிரம் பறிபோனவன் உருத்திர குழாங்களிலொருவ னென் றும், மூலப் பிரமாவுக்குக் கோடி யுருத்திர கணங்களி னாயுளொழிந்தால் அரை நிமிஷ மாகுமெனக் கூறுவதுளவென்றும், பக்தர்கணிமித்தம் சிவன் வைசியனாய் வருவதுண்டு, அந்த நியாயமவருக்குச் செல்லுமா றுளவென்றும், சிவகணங்களி லொருவர் ஹரியுட னெதிர்த்து அபஜயப்பட்டார் அவரைக் கற்பித்தவர் பிரமாவே யென்றும், சிவ கடாக்ஷத்தாற் சர்வ புவன சராசரங்களையுஞ் சிருஷ் டித்த திசைமுகனானவர் விஷ்ணுவி னுந்தியிலடங்குங் கற்பாந்த காலத்தில் உயிர்த் தொகைகளின் ஸ்தூல பிரவர்த்தியு மொடுங்கிச் சூட்சுமமாய் நின்ற ஆத்ம கோடிக ளனைத்தும் கற்பித்தவனோடு அவ்வுந்தியிற் றங்கிச் செயலற நிற்குந் தருணம் சிவனுடைய சகள ஸ்தூலமுங் காணாது நிஷ்கள சகள சூட்சுமமாய் நின்றதைச் சதாபூஜக மார்க்கண்டேயர் திரிசியத்திற் றரிசிக்க முடியாதலை வதைத் தானேவேலையிற் றுயில்வோ னோர்ந்து இவ்வழிபுக்குக் காணெனப் பணித்தனரென்றும், அரிய சங்கார கிருத்தியமாகிய மாயையி னொடுக்கம் சிவன்செயலாதலாற் சிவனைச் சிந்தித் துந்தியி லடக்கினாரென்றும், அன்னணஞ் சிந்தித்ததையே விஷ்ணு சிவனை விழுங்கினாரென்றும், பிறவுஞ் சிவனெனும் நாமமுள கணங்களையே அவ்வாறு விழுங்கினா ரென்றும், இலிங்கமறுப் புண்டவரும் பிருகுரிஷியாற் சபிக்கப்பட்டவரும் உருத்திர சங்கத்தா ரென்றுங் காண்பதோடு சிவ உருத்திர கணங்களாதியர்க்கும் சிவனெனும் பெயர் வருமாறு முன்னரேயே பன்னலுற்றேம். சிவன் சத்தியின் வயிற்றிற் பிறந்தாரென்பது; சிவதத்துவமாகிய நாதம் பிந்து சாதாக்கியம் மயேஸ்வரம் சுத்தவித்தை எனுமைந்தில் பிந்து தத்துவமாகிய சத்திதத்துவத்தி னின்று சதாசிவாதிகள் தோற்று முறைமையாகும். விஷ்ணுவின் வேர்வையில் பிரமாவின் றொடையில் சிவன் பிறந்தாரென்பது: 11 கோடி யுருத்திரர்களையுஞ் சிருஷ்டித்த 11 உருத்திரர்களும் சிவானுக்கிரகப்படி பிரமதேவரது நெற்றியி லிருந்து தோற்றிய முறைமை போலவும் பிரமன் விழித்துளிகளிற் றோற்றிய பேய்க்கூட்டங்களைப் போலவும் பல உருத்திரர்கள் தோன்றியதாகும். சிவன் தாமசகுணத்தரென்பது: உயிர்த்தொகை கட்கு விதிப்படி கண்டனை தண்டனை கொடாநிற்கும் உருத்திர தோற்றமாகிய ( காலாக்கினி ருத்திரன் )கால மூர்த்தி யாகும். தவிர முக்குணங்களுஞ் செயற்கையேயன்றி இயற்கையன்று. ஆதலால் குணரகித ஸ்வபாவனே சிவன் பிராமாணியம் :- ஸ்ரீ மாணிக்கவாசகர் திருவாசகம் குயிற்பத்து "கீதமினியகுயிலே கேட்டியே லெங்கள்பெருமான் பாதமிரண்டும் வினவிற்பாதாள மேழினுக்கப்பாற் சோதிமணிமுடி சொல்லிற்சொல் லிறந்துநின்ற தொன்மை யாதிகுணமொன்று மில்லானந்தமி லான்வரக்கூவாய்" இந்தப்படியே கந்தபுராணம் ததீசியுத்தரப் படலத்திலும் வெளியாம்.

( செயற்கை - மாயையின் கூட்டுறவு )

சிஷி: சிவன் அவ்விதகுண ரல்லவெனில் க்ஷீராப்தியி னமிர்தத்தையும் அதிற் பிறந்த விருத்திகளையும் கேசவன் தேவர்கட்குப் பங்கிட்டுத் தள்ளுண்ட விஷத்தையும் எருதையும் தாமதகுண முள்ள சிவனுக்குக் கொடுத்தார். அஞ்ஞான்று விஷத்தை விஷமென்றறியாமல் வாங்கியுண்டார் என்றும், "ராஜத சாத்துவிக குணத்தாற் பிரம்மாவையும் ராஜத தாமதகுணத்தா லென்னையும் விஷ்ணுவே பிறப்பித்தார்" எனச் சிவனே அகஸ்தியருடன் சொன்னாரென்றும் சின்னூற்களில் வெளியாவ தென்னை?

குரு: சிவபிரானுக்குரிய சர்வ வல்லமையில் பிரம விஷ்ணுக்களுக்கரிய துஷ்ட கண்டன மாதியும் ஒரு செயலா யிருக்கிறது.அச்செயல் தாமதகுணம் பற்றி யாமென வுள்கி அவரைத் தாமதகுணத்தா ரெனப் பிதற்றியதாகும். இங்ஙனம் அப்படி யுள்கற்கிடமின்றென மெய்ப்பிக்கின்றோம். நீ கேட்டி! சாதுவாகிய வொரு வன் யாதாமோர் காரணத்தாற் றனக்குண்டான கோபத்தைக் கோபிப் பதும், ஒருவன் ஆத்மலாபத்தை முன்னிட்டு அசன முன்னாது நோன்பிருப்பதும், ஞானியானவன் ஜகத்திச்சையை வெறுத்துப் பரத்திச்சையை விரும்பபுவதும் அணுத்துணையேனும் அகிர்த்தியங்களாகிய கோபத்தையும் வயிற்றுத் துரோகத் தையும் இச்சையையும் முறையே பொருந்தா திருப்பதுபோல பரமபதி நஞ்சு ண்டது துஷ்டகண்டனமே யொழிய தாமதகுண சுபாவமல்ல. விஷமென் றறியா துண்டாரென்பது; தக்கன் யாகசாலைக்கண் டோன்றிய ததீசிமுனிவரானவர் அங்குற்ற சிவதூஷணை கண்டு வெகுண்டு " சிவனை நீவிரிகழ்ந்து அவன் கதிசேராமலுழலக் கடவீர் " என்றவிதமாய் அன்றேயிட்ட சாபத்துக் குள்ளாகி மாறுபட்ட ( வைஷ்ணவப் பிராமணர் ) தக்கன் மரபிலுளார் துணிபேயாம். தள்ளுண்ட எருதென்பது; தருமதேவதையை ஊர்தியாகக் கொள்ளுந் தன்மை அவருக்கேயல்லால் ஏனைய தேவர்க்கில்லையென்பதுந் துணிபுதான். நீ பகர்ந்த பிரகாரம் அகஸ்தியரோ டுரைத்தவர் உருத்திரர்களி லொருவராவார்.

சிஷி: இன்னொரு ஆசங்கை. பிரசேதனனென்னு மரசன் செய்த தவத்திற்காகச் சிவன் தரிசனமாகிய போது " எவர் பரப்பிரமம், எவராலெமக்கு மோக்ஷமுண்டு, அவரை யனுக்கிரகஞ் செய்யவேண்டும்," என்று அவ்வரசன் கேட்க, அதற்கு சிவன் - " விஷ்ணுவே பரத்துவம், விஷ்ணுவே மோக்ஷங் கொடுக்கிறவர், நாமும் விஷ்ணுவையே ஆராதிக்கிறோம், நீயும் விஷ்ணுவையே ஆராதித்து மோக்ஷம் பெறுவாய் " என வுரைத்தா ரெனவும், " எவர்கள் சிவ விரதத்தைத் தரித்திருக்கி றார்களோ எவர்கள் அவர்களை யனுசரிக்கிறார்களோ அவர்கள் நல்லசாஸ்திரங் களுக்கு விரோதிகளான பாஷண்டி களாகக்கடவர்கள். மோக்ஷத்தை விரும்பு கிறவர் பொறாமையற்றவராய் சாந்தமுள்ள விஷணுவி னம்சங்களை யடை கிறார் " எனவும் பாகவதத்திற் பகர்ந்த தெற்று?

குரு: பிரசேதனனுக்குத்தரிசனமானவன் விஷ்ணுபாலுதித் தவ்வழிநின்ற கீழ்ப் பட்ட வுருத்திரனாவான். இவ்வித வுருத்திரர் பல ரிருந்தன ரென்பதைத் தக்ஷயக்ஞ ஹதத்தில் ஈசானன் முதலிய பலர் பங்கப்பட்டாரெனுஞ் சரிதங்களால் ஸ்காந்த த்தி னன்குணரலாம். வேத வேதாகம புராணங்களில் பரமசிவனைப் புகழ்வதன்றி பிரமவிஷ்ணுவாதியரையும் புகழ்வது முகமனாகும். பிரகிருதி அபின்ன நிமித்தோ பாதானமாய் விளங்கிய விஷ்ணுவைக் கிரியாபாத த்திற் கைவிட்டு அரிய சிவ வேடத்தைத் தரித்தவர்களானாலும் அனுசரிக்கிறவர்களானாலும் அவர்கள் நற்சாஸ்திரங்களை விரோதித்த பதிதர்க ளாவார்களென்றும், அத்வைத மோக்ஷ த்தை நாடுகிறவர்கள் விகிர்தாகார பூதகணாதிபதிகளை வழிபடாது திரிமூர்த்தி களின் பிரம ருத்திரர்களை வழிபடுவதனை யத் திருமாலையும் வழிபட்டு அவரம் சங்களைப் பொருந்தி அல்லது அவ்வுபாசனாமூர்த்தி சகாயங்கொடு பரமமுக்தி யையெய்துகிறவர்கள் பொறாமையற்ற மகான்களாவார்களென்றும் பாகவத த்திற் பகர்ந்த தொழிய பௌராணிகங்கடந்து சகுணபாவனை யேதுமின்றி நின்ற ஈஸ்வரனாகிய மஹாகைலைக்கரசை விட்டு விடச்சொல்லியதல்ல. அப்படிச் சொல்லில், அது தக்ஷனிச்சயமாகிய அக்ஞான மதமாமென்க. வேதத்திலுள்ள சரபோபநிஷத்தில்:- " யோவாம பாதார்ச்சித விஷ்ணுநேத்ர யதஸ்மை ததௌசக்ர மதீவ ஹ்ரஷ்ட ஸ்ததஸ்மை ருத்ராய நமோஸ்து " என்று சொல்லப்பட்ட சுலோகத்திற் கருத்தம் : விஷ்ணுவின் கண்ணாற் பூஜிக்கப் பட்ட இடதுபாத முள்ளவரும், அதனால் மஹா விஷ்ணுவுக்கு மேன்மையுள்ள சக்கராயுதத்தைப் பிரசாதித்தவருமான ருத்ரனின் பொருட்டு நமஸ்காரம் என்றும் பரிஷ்காரமாய் வெளியாவதால் ; மேற்சொன்ன தாற்பரியம் மிக வுறுதியாம்.

சிஷி: சிவனே கடவுளாயின் சிவனுக்கு நாமங்கள் வேறாகவும், கடவுளுக்கு நாமங்கள் வேறாகவும் நிகண்டாதிநூல்களில் இரண்டு பிரிவாய் நிகழ்த்தி யிருப்பானேன்?

குரு: அஃது சமயநியாயம் பற்றியே. அலாமல், நிகண்டியற்றினவர் புறச்சமய த்துள சமணமுனியன்றோ. நிற்க; சிவபெருமானுக்கு அனந்தன், அதிகன், அறவாழியந்தணன், ஞானமூர்த்தி, அஷ்டமூர்த்திதரன், பசுபதி, தேவதேவன், வேதாந்தன், நாதாந்தன், கருத்தன், ஈசன், மஹேசன், நாசமிலி, அகண்டன், பிரமாண்டநாயகன் எனபனவாதிய நாமங்களு முண்டென நூல்கள் கதறுகின்றமையால் சிவனே கடவுளென்றேன் உணரொணா? ( சமயம் - சமயமெனும்மதம் )

சிஷி: அற்றேல், சிவனுக்குப் பவன் என ஓர் நாம முண்டென்றறிகிறேன். அதுபற்றி யிங்ஙனம் பொருள் காணில், பவம் என்பது பாவம், பிறப்பு, அழிவு என வரும். அதனாற் சிவன் பாவமுடையார், பிறப்புடையார், அல்ல தழிவுடை யார் என்பதற் கையமென்னை?

குரு: இதுதான் * அதிரேகார்த்தம். ஓ! புத்திமானே! பவமென்னு மொழிக்கு நீ பகர்ந்த பொருளன்றி நிலைபரமென்றும்; சுத்தம் சுகமென்றும், மேலான தென்றும் பொருளிருப்பதைச் செவ்வனே நோக்க நின் விழி பார்வையிழந் ததோ? வேணுமென்று விட்டு விட்டதோ? அறியேம். கேள்! கடவுளுக்குங் குருடனுக்கும் "அதரிசனன்" என்று ஓரிய லுள. அதிற் கடவுளைக் குறிக்கும் போது கட்புலனுக் கெட்டாதவனென்றும், குருடனைக் குறிக்கும்போது பார்வை யிழந்தவனென்றும் அர்த்தஞ் செய்து கொள்ளவேண்டியது கல்விமான் களின் கடமையா யிருக்க; நீ பிதற்றியவாறு உவாலம்பனார்த்தம் புரித லொழுங் கன்று. இன்னமும் பவமென்பது சமஸ்கிருத அர்த்தப்படி நீ சொன்ன பிரகாரம் பிறப்பென்றும்; பிரபஞ்ச மென்றும் பொருளாம். அதனால் எல்லாவற்றையும் பிறப்பிக்கிறவர், பிரபஞ்ச கர்த்தாவென்று விசேடப் பொருள்படும் ( உவாலம் பனம் - தூஷணை ) ( * அதிரேகமென்பது = ஆச்சரியம் )

சிஷி: ஈ திவ்வணமாயினும், சிவனுக்கு வேத கௌலேயகன் என்று ஓராக்கு வயம் நூல்களில் வெளிப்படுகின்றது அந்த வாக்கியத்திற்கு வேதகுலத்திற் பிறந்தவன் என்றொரே யர்த்தமிருக்கிறது. இதினாற் சிவன் பிறப்புளார் குலமு ளாரென்றும் வெளியாகின்றனவே : அஃதென்னை?

குரு: அப்படியன்று. கௌலேயகமென்பது நாய். அதனால் வேதத்தை

நாயாக வுடையாரென்றாகும். அஃது இவ்வியாசத்தின் 11 -ஆவது வினாவுத்தரத்தில் விளக்கிய பைரவருக் குரியதொன்றாம். பிறவும், அர்ச்சுனன் தவத்திற் கெழுந்த காலை வேதங்களை நாயாகவுடையாரென்றுமாம்.

சிஷி: கடவுள், சிவனெனப்படுவராயின் மற்றைய கருத்தாக்களும் அவர் பூண்ட வேடத்தையே பூணாது விவித வேடதாரிகளாயு மிருத்த லென்னை?

குரு: தொழிலிற்கேற்ற விதமான வேடங்களையும் விடயங்களையும் பிரபஞ்ச சகிதத்தில் அவரவ ருடைத்தாயினர். ஆயினும், சிவனைப் பூஜிக்குங்காலத்து உருத்திர சாதனங்களோடு நிகழுவார்.

சிஷி: மனுடரானவர்கள் தொழிலிற்குத் தக்க வேடதாரிகளாயிருப்பதில் கர சிரங்க ளியல்புக்கு விரோதமா யேற்பட வீக்ஷணித்ததில்லை. அது மானத் தொழி னிமித்தந் தேவர்களும் பல வேடதாரிகளே யாயினும் பலசிரம் பலகரங்களாயும் உடல் விகிர்த முளதாயும் இருக்கிறதாய் வெளியாகின்றன. அதுவும் சிவன் செயலோ?

குரு: மானிட ஜென்மத்திற்கும் மேலான ஜென்மமாயுய்யுந் தேவவகுப்பில் அவரவர்கட்குத் தக்க தேகத்தைத் தேவன் கொடுத்திருக்கிறார்; மேலும், அவர்க ளற்புதப் பிரவேச சரீரிகளாகவும் தேவன் சமீபத்து வாழ்கிறவர்களாகவு மிருத்த லினால் அவர்களை மனிதர்களேய்ப்ப வொரேவடிவாய் நினைக்கப்படா.

சிஷி: அவர்களை நாம் பார்க்கச் சம்பவித்தால் தேவர்களென்று நிச்சயிக்க ஏதாவ தடையாள முண்டா?

குரு: அனேக முண்டு. அவற்றுட் பொதுவாய்த் தேவர்க ளெவ்வருக்கும் உள்ள திமை கொட்டாமையே யாம்.

சிஷி: அவர்கட் கூணுறக்க முண்டா?

குரு: கேள்! பசிப்பிணியும் விழித்துயிலும் பூச்சியம். ஆனால், யோக நித்திரை யையும் அபேட்சித்ததைப் புசித் தனுபவிக்கும் சக்தியையும் பிரபஞ்ச சகிதத்தி லுடையவர்களா யிருப்பார்கள்.

சிஷி: அவ்வித பேறு வாய்ந்த வவ்வமரர்கள் இறந்து பிறந்துழலப் பெற்ற மூலமென்னை?

குரு: நான்முகன் வனைந்த க்ஷத்ரயாகத்தில் சிறுவிதியானவன் சிவதூஷணை செய்ததை மறாமற் சம்மதித்திருந்த விஷ்ணுவாதிதேவர்களை ஸ்ரீதிருநந்தி தேவர் நோக்கி " நீவீர் ஒரு பகலில் இறந்து பிறந்துழல்வதுமன்றி சூரனென்னும் அசுரனால் வாதைப்பட்டு அளவற்ற யுகம் இன்னலுக் காளாவீர்கள்" எனவுஞ் சபிக்கலாயிற்று! அதுவே பிரதமமூலம். பிரமாணம்: ஸ்ரீ கந்தபுராணம் : பிரமயாகப்படலம். " ஈரமில் புன்மனத் திழுதை மற்றுனைச் சார்வுறு கடவுளர் தாமு மோர்பக லாருயிர் மாண்டெழீஇ யளப்பி லாவுகஞ் சூரெனு மவுணனாற் றுயரின் மூழ்கவே. "

சிஷி: சரி, நிகழ்த்திய பரமசிவனே தொழிற்படு கர்த்தாக்களாகவும், சர்வ சாக்ஷியா கவும் விளங்குகிறாரென் பதற்குப் பூர்வ லிகிகம் உண்டா?

குரு:- ஓம்! ஸ்ரீ திருஞான சம்பந்தமூர்த்தி நாயனார் தேவாரம் திருவெழுகூற்றிருக்கையில். "ஓருரு வாயினை மானாங் காரத் தீரியல் பாயொரு விண்முதல் பூதல மொன்றிய விருசுட ரும்பர்கள் பிறவும் படைத்தளித் தழிப்பமும் மூர்த்திக ளாயினை யிருரோ டொருவ னாகி நின்றனை" வேத த்திலுள்ள கைவல்யஉபநிஷத்தின்படி தியானஞ் செய்யப்படுவதில்:- " உமாஸஹாயம் பரமேஸ்வரம் ப்ரபும் த்ரிலோசனம் நீலகண்டம் ப்ரஸாந்தம் தியாத்வா முனீர்கச்சதி பூதயோனி ஸமஸ்த சாக்ஷிம் தமஸ:ப் பரஸ்தாத்." என்று காண்பதோடு, வேத வேதாகம புராணாதி கலைகள் மிக்கன விளக்கவுங் காண்கலாம்.

சிஷி: நன்று பாரதத்திற் பகர்ந்தபடி தீக்கடவுள் காண்டவவன மெரிக்கும்போது கிருஷ்ணார்ச்சுனாளோ டெதிர்த்த இந்திரன் முதலிய தேவர்கட்குச் சகாயமாய் வந்த சிவனானவர்: அக்கிருஷ்ணார்ச்சுனாளால் தோல்வியடைந்தது எதனால்?

குரு: அப்படிக்கானவர், திக்குபாலகரி லொருவரான ஈசானனாம். ஈதனைய விவித காரணங்களாற் குறைவாய் வெளியாஞ் சிவனெனப் படுவா ரெல்லாரும் கீழ்ப் பட்ட வுருத்திராதி தேவர்களென் றெண்ணக்கடவாய்!

சிஷி: ஆயின், சிவனுடைய மூர்த்தந்தான் எப்படிப்பட்ட தாயிருக்கும்?

குரு: இது குறித்து 1 ஆவது வியாசம் 25 - ஆவது வினாவுத் தரத்தினும் விளக்கினோம். இன்னமும் : நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் பருதி மதி ஆன்மா என அஷ்டமூர்த்தமாயும், அஃது ஸ்தூலமாயும், சூட்சுமமாயும், காரணமாயும், மஹாகாரணமாயும், பிறவும் இவையமைந்த பற்பல வடிவங்களாயும், சிலர் கண்டதாயும், காணவரிதாயு மிருக்கின்றனவாம்.

சிஷி: மேலேயருளிய நந்திதேவர் என்கிறவர் யாவர்?

குரு: சிவாதார முனிவருடைய தவத்தினால் அவருக்குப் புத்திரனாய்த் தோன்றி பரமசிவனைக் குறித்துத் திருவையாற்றிற் றவமிழைத்து நெற்றிக் கண் மான் மழு சதுர்ப்புஜம் காளகண்டம் முதலியவை விளங்கச் சிவசாரூபமும் இரஜிதப் பிரம்பும் சுரிகையும் கைலைக்காவலும் கணங்களுக்குத் தலைமையும் பெற்றுக் கொண்டார். அன்னணம் பெற்றுக்கொண்ட இரண்டாஞ் சம்புவாகிய ஸ்ரீ நந்தி யம் பெருமான்; கைலாய அந்தராளத்தின் யாமியவாயின் மண்டபத்திற் றென் முகமாய்க் கொலு வீற்றிருந்து சிவகட்டளைக் கெதிர்பார்த் திருப்பவராம். சிவ தரிசனத்திற்கு முன்னம் அவர் தரிசனமாம். அவர் தரிசனம் சிறந்த யோகீஸ்வர ர்கட்கு முபாதானமாகும். இவரே புராணங்களிலும் ஆகமங்களிலும் வேதங்க ளிலும் "பரமசிவமே பரத்துவம்" என்று முடிபு கூறியிருக்க " விஷ்ணுவே பரத்துவம்" என்று மாயையின் வயப்பட்டு அசத்தியம்பேசி நீட்டிய வியாசருடைய கரங்களைச் சபித்துத் துணித்த அபரமசிவமாவார். பிறவும், வசுமணாவதாரஞ் செய்து உலகத்தில் வீரசைவத்தை நிலை நாட்டிய ஆசானு மிவரெனப்படும். மேனுவன்ற கைலைக் காவற் கொலுமண்டபத்தில் மேற்கே சிரசும் கிழக்கே பாதமும் வைத்து வலத்தோள் கீழாய்ப் படுத்து நெற்றிலோசனச் சுடரானது பத்துயோஜனை வரை பரவி யாவரு முண்ணுழையாது காவலிருக்கும் படிக்கும் உள்ளே புகப் பலம்பெற்ற சிவபதிகண் மட்டும் தடையிலாது அச்சுடருட் புகுந்து காற்புறமாயுள்ளே செல்லும்படிக்கும் சிவயோக நித்திரைகொள்வாரும், கோமுகம்போல நீண்ட வதனமுள்ளாரும் ஸ்ரீ சைலவடிவமாகிச் சிவனை வதியப் பெற்றாரும் இவரேயாவார். சிவாதார புத்திரரென்பதைச் சிலாதார புத்திரரென்று அக்ஷரப் பிசகா யதிர்க்கப்பட் டிருப்பதுமுள.

சிஷி: இவ்வித தேவ நிச்சயங்களை இந்தப் பரத கண்டமாகிய ஹிமாசலத் திற்குத் தென்பாகஞ் சிறிது தூரமுள்ள பூமிகளின் வசிப்பவர்களிற்றானே சில ரொப்புக்கொண் டிருக்கிறதாய்த் தெரிகிறது. மற்றுந் திசா திசைகளில் வசிப்ப வர்களு மொப்புக் கொண்டிருப்பதுண்டோ?

குரு: அண்டப் பித்திகை வரையி லுலவக்ககூடிய மான்மியதேவர் முனிவர் சித்தர் களும் ஆங்காங்கு அருமறை விதிப்படி தேவ நிச்சயம் புரிந்தே யிருக்கிறார்கள். அதிற்சிலபாகம் சரியை, சிலபாகம் கிரியை, சிலபாகம் யோகம், சிலபாகம் ஞான மாகவும், சிலபாகம் சரியையாதி நான்கும் ஒழுங்காய்ச் சேர்ந்ததாகவும், சிலபா கம் அவற்றுண் மிகுதியுஞ் சிறிதுங் கலந்ததாகவும், சிலபாகம் நினைப்பின் வண்ணமாகவும் அனுசரித்துத் தேவாராதனை முதலியனசெய்து வருவதாகவு மிருப்பதில், மாயையின் விசித்திர காலகரணத்தால் மத்தியின் நூதனமான புறச் சமயங்களேற்பட்டு வெவ்வேறு கொள்கைகளாய்ப் பரவிக்கொண் டிருக்கின் றன, ஆனால், பெரும்பாலும் தேவநிச்சயமட்டும் விட்டுப்போக வில்லையென் பதுள்ளதே. நிற்க; உலகெலாம் ஒளிப்பிரகாசமாய்க் காணுங்கிரணங்களானவை பானு வென்னும் ஒரு கிரகத்திலிருந்தே தோன்றல் போலும், உடம்பெங்கும் பரவுமுதிரமானது ஹிருதயக் காயென்கிற ஓரிடத்திலிருந்தே வெளிப்படல் போலும், அவ் வுதிரமாய் மல்கும் உயிருக்காதாரமாகிய ஆத்மா அறிவாகவியங் கினும் அது உள்ள மென்கிற ஓரிடத்திலிருந்தே நிகழ்வது போலும் தெய்வ நிச்சயம் உலகெங்கும் பரவியிருக்கினும் அதற்கு முக்கிய ஸ்தானமாகிய குமரித் தீவு என்னும் இந்தப்பூமியே பிரதானமாய் விளங்கும். காரணம்: இதுமுன் அனந்த சிருஷ்டிகள் செல்லாகி இப்போது தோற்றமா யீக்ஷணிக்கத்தக்க பூத பௌதிகங்களை முதலிற் சிருஷ்டித்தது இந்தப் பூமியிலேயே யாம். சிருஷ்டித்த பூமியின் புடையே வேதவேதாகம கலைகளில் ஜேஷ்டமும் தேவாலயமும் தேவ வாசமும் துணிபா யிருக்கவேண்டுமென்ற நிகமத்தால் அவைகளீண்டு விசேடித் தன, இமயபருவதத்துக்குத் தக்ஷிணத்திலுள்ள செவ்வாயின்பூமியில் தொண்டை மண்டலத்திலுள்ள திருக்கழுக்குன்றில் வேதத்தைக் கடவுளுத்தாரப்படி தேவ காவலில் வைக்கப்பட்டு அங்கெழுந்தருளப்பெற்ற கடவுட்கு வேதகிரீஸ்வரர் என்று திருநாமம் விளங்கிற்று. அதனாலும், தேவாதிகளாற் பரிபூஜனஞ் செய்யப் படும் காசி முதலிய க்ஷேத்திரங்களும் மூர்த்திகளும் கங்கை முதலிய 64 கோடி புண்ணிய தீர்த்தங்களும் மகேந்திரம் பொதியம் முதலிய சப்தகுலாசலங்களும் இங்கே மான்மியமாயேற்பட்டுத் தவங்களதிதமும் பலிக்கத்தக்கதனாலும், இமய கிரிக்கு உத்தரத்திலுள்ள கிம்புருடவருடமாகிய சந்திரனதுபூமியில் 1008 சிவாலய ங்களினு மொன்றாகிக் கர்த்தனெழுந்தருளிய வெள்ளியங்குன்ற முள்ள தனா லும் தேவதலமென உசித மாயிற்று. ஏனையவை தாழ்வாயிற்று. இந்தச் சிருஷ்டி யிலருளிய உண்மைப் பிரமாணங்களுக்கு மாறுபட்ட ஜீவன்கள் அவ்விதங்கர்த்த னிலையறியாது மாறுபட்டுழல்வதையே ஒரு தண்டமா யனுபவிக்கவென்று பரத கண்டத்தில் இந்திரம் செருகம் தாமிரம் கெபத்தி நாகம் சவுமியம் காந்தி ருவம் வருணம் எனும் எட்டுத் தீவுகளாகிய தருமமற்ற அன்னிய பூமிக்கண் தள்ளப்பட்டார்கள். தள்ளவும் படுவார்கள். மீட்டுந் தெளிவுறுஜீவன் நவின்ற தேவபூமியாகிய இக்குமரித் தீவிலேயே தோன்றி வேதாகமப் பிரமாணங்களைக் கைக்கொண்டு கடைத்தேறும். கழுக்குன்றில் வேதத்தை ஏன் பந்தகமாய் வைக்க ப்பட்டதென்னில், வெளிவந்த வேதப்பிரதிகள் நாளிலே வியாசராதி முனிவராற் பேதப்படுமாயினும் கரத்தனருளிய வுண்மை உண்மையா யிருந்து இக்கலியுகம் 5,000 -ன் மேல் வெளிப்பட் டோங்கவென்றேயாம். அதில், இப்போழ்து வழங்க ப்படுகிறபடி சரியையாதி நான்கு பாதங்களெனல் தப்பு, கிரியையாதி நான்கு பாதங்க ளெனலே சரியென்றும்; ஆன பலவித பூர்வ நியாங்கள் வெளிப்படத் தகும் - அதுபோலவே பரமசிவ நிச்சயங்களெல்லாம் பரிஷ்காரமாய்க் காணத் தகு மென்றும், அவ்வேதம் - புறச்சமயங்களைக் கண்டித்து உட்சமயத்தை நிலை நாட்டுங்கால் எடுக்கப்படு மென்றும், அதற்காக ஸ்ரீ சுப்பிரமணியப் பெருமா னின் அமிசையில் பிரம கோத்திரத்தில் மனுவாக வுதித்தவொருவர் எழுந்தருளி வருவாரென்றும் திருநந்திதேவர் மார்க்கண்டேயருக் கருளும் உலவாக்கிழி யெனுஞ் சாத்திரம் அருளும் வண்ணம் யாமு முரைத்தது மறிதி! நுவன்றபடி சரியையைக் கிரியையெனல், எத்தொழிலுக்குங் கிரியை துவக்கமாய்க் காணப் படலா லென்றும், கிரியையென்று முதலில் சொல்லவேண்டியதையே சரியை யென்று மாறிச் சொன்னது மொழிப்பிசகேயல்லான் முறைப் பிசகில்லை யென்று முய்த்துணர்க!

சிஷி: இன்னொன்று சிலர், தேவன் ஒருவனேயுண்டு ஏனை தேவர் இலரென்றும், சிலர், தேவனுமுண்டு தேவதூதர்களு முண்டென்றும் பற்பல விதமாய்ப் பேசுவ தென்னை?

குரு: இரண்டற்ற அத்வைதக் கொள்கையிற் பிரதமமான வஸ்துவைத்தவிர ஏனைதேவர்க ளுண்டென்னவாவது, அவர்களை யுபாசிக்கவாவது கடமைப் படாததால், அவர்கள் - தேவனொருவனே யெனவும்; பின்னுஞ்சிலர் தேவனொ ருவ னுண்டென்று அந்தந்தத் தேச பாஷியத்தில் அவருக்கு வேறு நாமங்களும் அத்தேவ ஏவலுக் கெதிர்பார்த்திருக்கிற தேவர்களையே தூதர்களென்று அவர் கட்கு மதேவிதமாய் வேறு நாமங்களுமுண்டெனவும் பேசுவார்கள். சிலர் - ஒன்று முணராமலே தங்கள் புல்லறிவிற் கெட்டின மௌட்டிய மதிப்பாலும், அத்வைத நூல்களைச் சிறிதுபடித்து அதன் கருத்தோரா வறிவீனத்தாலும், அவ்வாறு வழி வழி சொல்லிக் கொள்வதையே சரிசரியென்று வைத்துக் கொள்ளுந் தடித்தனத்தாலும் அப்படிப் பேசுவார்கள்.

சிஷி: சரி. பரமசிவ மென்பதை நித்திய நிஜாநந்த சாக்ஷாத்காரமாகிய ஈஸ்வர மெனத் தெளிந்த வண்ணந் தெளிந்துளேன். மற்றது பிற்றையாகும். ஆற்று மஞ்சலியை அங்கிகரித் தருண்மின்.

குரு: நன்று நன்று. பெரியதிருவுளந் திருவருண் புரிக.

( பரமசிவ மென்பதைக் குறித்த வியாசம் முற்றிற்று )